சாலைகளில் சுற்றி திரியும் கால்நடைகளை பிடிக்க பிரத்யேக வாகனம் அறிமுகம்..!

கோவை மாநகர பகுதிகளில் உள்ள சாலைகளில் மாடு, குதிரை போன்ற கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.

கால்நடைகளை காலையில் மேய்ச்சலுக்கு அவிழ்த்து விடும் உரிமையாளர்கள் மாலையில் தான் வீடுகளுக்கு பிடித்து செல்கின்றனர். பகல் முழுவதும் சாலைகளில் சுற்றும் கால் நடைகளால் விபத்துகள் மற்றும் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்படுகிறது. சாலைகளில் சுற்றும் கால்நடைகளை மாநகராட்சி அதிகாரிகள் பிடித்து அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதித்தாலும் பலன் இல்லை. எனவே இதனை தவிர்க்க மாநகராட்சி சார்பில் சாலைகளில் சுற்றும் கால்நடைகளை பிடித்து அகற்ற பிரத்யேக வாகனம் கொண்டு வரப்பட்டு உள்ளது.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறியதாவது:-
புதிதாக கொண்டு வரப்பட்ட இந்த வாகனத்தில் மாடு உள்ளிட்ட கால்நடைகளை குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஏற்றலாம். இன்று முதல் இந்த வாகனம் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படுகிறது. முதல் இருமுறை கால்நடைகள் பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படும். மீண்டும் தொடர்ந்தால் அந்த கால்நடைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும். கால்நடை உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.