மதம் மாறி செல்பவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கூடாது – இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் பேட்டி..!

தம் மாறி செல்பவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கூடாது என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர் சந்திப்பு

தூத்துக்குடியில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கலந்துக்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொஞ்சம் கொஞ்சமாக நாடார் சமுதாயத்தின் பெயரிலேயே கிறிஸ்தவர்கள், நாடார்களுக்கு கிடைக்க வேண்டிய அந்தஸ்து மற்றும் சலுகைகளை கிறிஸ்தவ நாடார் என்ற சாதிச் சான்றிதழ்களை வைத்துக் கொண்டு, இந்து நாடார்களுக்கு கிடைக்க வேண்டிய வாய்ப்புகள் பறிக்கப்படுகிறது என்றார்.

மேலும், கொஞ்சம் கொஞ்சமாக நாடார்கள் சிறுபான்மையினராக மாறி வருகிறார்கள். மதம் மாறி செல்பவர்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கூடாது. இது குறித்து விரைவில் நீதிமன்றத்தை அணுக இருக்கிறோம். இன்று (மே 12) 234 தொகுதிகளிலும் லஞ்ச ஊழலுக்கு எதிராக ஒலி எழுப்பும் போராட்டம் நடத்த உள்ளோம்.

பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் குரல் பதிவு குறித்து உண்மைத் தன்மை கண்டறிந்து அதை வெளியிட்டவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ்நாடு அரசு கொண்டு வந்த நீர் நிலைகள் இயற்கை வள அழிப்புச் சட்டத்தை வாபஸ் பெற வேண்டும். தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு படுமோசமாக உள்ளது. அவை காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஹலால் முத்திரை தமிழ்நாட்டில் ரத்து செய்யப்பட வேண்டும். மேலும், அது தடை செய்யப்பட வேண்டும். மதுரை சித்திரைத் திருவிழாவில் ஒரு அமைச்சர்கள் கூட பங்கேற்கவில்லை. விழாவில் பட்டா கத்திகளுடன் ரவுடித்தனம் செய்து வியாபாரிகளை மிரட்டுவது போன்ற குற்றச் சம்பவம் நடைபெற்றது.

இது குறித்து எந்த கட்சியும் பேசவில்லை. தூத்துக்குடியில் திமுக அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக் கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்பி, ஆளுநர் என்பது பிரிட்டிஷ்காரர்களால் போடப்பட்ட எச்சம் என பேசி உள்ளார். எதிர்கட்சியாக இருந்த போது சட்டையை கிழித்துக் கொண்டு ஆளுநர் மாளிகைக்கு ஓடி மனு கொடுக்கும் போது தெரியவில்லையா? என கேள்வி எழுப்பினார்.

மேலும், ராமனையும், சீதையையும் இழிவுபடுத்தக் கூடிய வகையில் இயக்குநர் பா.ரஞ்சித்தினுடைய உதவி இயக்குநர் விடுதலை சிகப்பியை வன்மையாக கண்டிக்கிறேன். ‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படும் திரையரங்கு உரிமையாளர்கள் மிரட்டப்பட்டு, படம் திரையிட்டால் சட்டம் – ஒழுங்கு பிரச்சனை வரும் என பயந்துள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்துள்ளதற்கு இதுவே சாட்சி” என கூறினார்..