நெல்லையில் பல் பிடுங்கிய விவகாரம் : 24 போலீசார் பணியிட மாற்றம்- எஸ்.பி.சிலம்பரசன் அதிரடி உத்தரவு..!

நெல்லை: நெல்லை மாவட்டம் பல் பிடுங்கிய விவகாரத்தில் 24 போலீசாரை பணியிட மாற்றம் செய்து எஸ்.பி.சிலம்பரசன் உத்தரவிட்டுள்ளார்.

அம்பாசமுத்திரம், கல்லிடைக்குறிச்சி, வி.கே.புரம், சுத்தமல்லி காவல்நிலைய போலீசார் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். நெல்லையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் விசாரணைக்காக அழைத்து வரப்படும் கைதிகளின் பற்களை பிடுங்கியதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை குழு அமைக்கப்பட்டது. விசாரணை குழுவின் அமுதா ஐஏஎஸ் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்ட நிலையில் கடந்த மாதம் 10 மற்றும் 17ம் தேதிகளில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

உயர்மட்ட குழு விசாரணை குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து 17 வயது சிறுவனின் பற்கள் பிடுங்கப்பட்டதாக வந்த புகாரின் அடிப்படையில் ஏஎஸ்பியாக இருந்த பல்வீர் சிங் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அத்துடன் பல்வீர் சிங் மீது மூன்று பிரிவுகளின் கீழ் 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பல் பிடுங்கிய விவகாரத்தில் தொடர்புடைய காவலர்கள் உட்பட 24 காவலர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.