ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் குப்புறக் கவிழ்ந்து கார் விபத்து.. 2 சிறுமிகள் பலி – ராணிப்பேட்டையில் சோகம்..

சென்னை வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முகமது சலீம். இவர் மகள் தமசுல் பாத்திமா, (வயது 15).

முகமது சலீமின் உறவினர் சென்னை கோட்டூரைச் சேர்ந்த அப்துல் ரசாக். இவரின் மகள் சுமையா பாத்திமா (வயது 17). இந்த இரண்டு குடும்பத்தினரும் ஆந்திர மாநிலம், அனந்தபூர் மாவட்டத்திலுள்ள வஜ்ரகரூர் பகுதியில் வசிக்கும் தங்களின் உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் கலந்து கொள்வதற்காக நேற்று சென்றனர். இரண்டு கார்களில் மொத்தம் 13 பேர் சென்றிருக்கிறார்கள். துக்க நிகழ்வில் பங்கேற்றுவிட்டு, இன்று காலை சென்னைக்குத் திரும்பினர். முகமது சலீம், அப்துல் ரசாக் குடும்பத்தினர் வந்த காரை சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த 32 வயதான விஜய் ஓட்டினார்.ராணிப்பேட்டை மாவட்டத்திலுள்ள பெல் தொழிற்சாலை அருகே பைபாஸ் சாலையில் வந்தபோது, ஓட்டுநரின் தூக்கக் கலக்கத்தால் கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோர பள்ளத்தில் குப்பற கவிழ்ந்தது . இந்த விபத்தில் காருக்குள் இருந்த சிறுமிகள் தமசுல் பாத்திமா, சுமையா இருவருக்கும் பலத்த காயமடைந்து நிகழ்விடத்திலேயே பரிதமாக உயிரிழந்தனர்.  ஓட்டுநர் உட்பட நான்கு பேர் காயத்துடன் உயிர் தப்பினர். சிகிச்சைக்காக அவர்கள் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சிப்காட் போலீஸார், சிறுமிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்..