பூத் சிலிப் விநியோகம் பிப்ரவரி 12 முதல் தொடங்குகிறது-தேர்தல் ஆணையம் அறிவிப்பு..!

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஒரே கட்டமாக பிப்ரவரி 18ம் தேதி நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் பணிகள் நிறைவடைந்து அவை பரிசீலிக்கப்பட்டு வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

வேட்பாளர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
அரசியல் கட்சிகள் பிரச்சார பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடத்த தேர்தல் ஆணையம் பல்வேறு கட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. தமிழகத்தில் 10 ஆண்டுகளுக்கு பிறகு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருப்பதால் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. பதட்டமான வாக்குசாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில் வாக்காளர்களுக்கு பூத் சிலிப் விநியோகம் குறித்து மாநில தேர்தல் ஆணையம செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி பிப்ரவரி 12 முதல் பூத் சிலிப் வழங்கும் பணிகள் தொடங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் வீடுகளுக்கே நேரடியாக சென்று பூத் சிலிப் வழங்கப்படும். விடுபட்டவர்களுக்கு ஓட்டுப்பதிவு நடைபெறும் நாளில் வாக்குச்சாவடிக்கு அருகே பூத் சிலிப் விநியோகம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது..