ஆளுநரிடம் இதுவரை நிலுவையில் உள்ள மசோதாக்கள்.!!

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போட்டுள்ளதாக ஆளும் திமுக அரசு தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.

இதே காரணத்தை முன்வைத்து கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி ஆளுநர் வைத்த தேநீர் விருந்தையும் திமுக அரசு புறக்கணித்தது.

இந்த நிலையில் பல்கலைக்கழகங்களில் துணைவேந்தரை தமிழக அரசே நியமிக்கும் வகையில் சட்டமசோதா பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டு ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை நிலுவையில் உள்ள மசோதாக்கள் என்ன என்பதை பார்ப்போம்.

1. தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக்கட்சிகளின் ஆதரவுடன் இரண்டாவது முறையாக நிறைவேற்றப்பட்ட நீட் மசோதா

2. தமிழக சட்டப்பேரவையில் கூட்டுறவு சங்கங்களின் பதவிக்காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 3 ஆண்டுகளாக குறைக்கும் சட்டமசோதா ( ஜனவரி 12, 2022 )

3. பாரதியார் பல்கலைக்கழகத்தின் கீழ் வரும் சுயநிதி கல்லூரிகள் , தனியார் கல்லூரிகளில் உறுப்பினர்களை சேர்ப்பது தொடர்பான சட்டமசோதா ( செப்டம்பர் 20, 2021 )

4. தமிழக மீன்வள பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை அரசே நியமிப்பது தொடர்பாக அதிமுக ஆட்சிக்காலத்தின் போது நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா ( ஜனவரி 13, 2020 )

5. மாநில சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று சில சட்டங்களை வாபஸ் பெறுவது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா ( ஜனவரி 13, 2020 )

6. தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தரை தமிழக அரசே நியமிப்பது தொடர்பாக நிறைவேற்றப்பட்ட சட்டமசோதா ( ஜனவரி 18, 2020 )

7. டி.என்.பி.எஸ்.சி போட்டித் தேர்வுகளில் பொதுத்தமிழை ஒரு பாடமாக சேர்ப்பதற்கான சட்டமசோதா ( ஏப்ரல் 2, 2020 )

8. கூட்டுறவு சங்கத்தில் இயக்குனர் குழுவை சஸ்பெண்ட் செய்யப்படும் பட்சத்தில் உடனடியாக நிர்வாக அதிகாரி ஒருவரை பதிவாளர் நியமிக்கும் அதிகாரம் வழங்கும் சட்ட திருத்த மசோதா (செப்டம்பர் 24, 2020 )

9. அண்ணா பல்கலைக்கழகத்தை அண்ணா தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி பல்கலைக்கழகமாக பெயர் மாற்றம் செய்யப்படுவதற்கான சட்டமசோதா ( செப்டம்பர் 24, 2020 ) – இந்த மசோதாவை திமுக ஆட்சிக்கு வந்தபின் வாபஸ் பெறப்பட்டது

10. அண்ணா பல்கலைக்கழக திருத்தச் சட்ட மசோதா( செப்டம்பர் 24,2020 ) – ஓராண்டுக்கு மேல் நிலுவையில் இருந்ததால் இதனையும் திமுக அரசு வாபஸ் பெற்றது

11. சென்னை பல்கலைக்கழக துணைவேந்தரை நியமிக்கும் தேர்வுக்கமிட்டி தொடர்பான மசோதா ( நவம்பர் 28,2020 ) – நீண்ட கால நிலுவையின் காரணமாக திமுக அரசு இச்சட்ட மசோதாவை வாபஸ் பெற்றது.