விபத்தில் காதலன் இறந்ததால்… காதலியும் தூக்கிட்டு தற்கொலை..

கோவை பெரியநாயக்கன்பாளையம் பக்கம் உள்ள நம்பர் 4 வீரபாண்டி, பூங்கா நகரை சேர்ந்தவர் ஈஸ்வரன். இவரது மகள் தர்ஷினி ( வயது 21) இவர் நரசிம்மநாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார் . அதே நிறுவனத்தில் சோமனூர் பக்கம் உள்ள மங்களம் பகுதியை சேர்ந்த திவாகர் (வயது 24) என்பவரும் வேலை பார்த்து வந்தார். இதனால் அவர்களுக்கு இடையே பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது காதலாக மாறியது. இதனால் அவர்கள் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். நேற்று முன்தினம் திவாகர் தனது நிறுவனத்தில் பணியை முடித்து விட்டு வீட்டுக்கு செல்ல சிங்காநல்லூர் பட்டணம் பைபாஸ் ரோட்டில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார் . அப்போது அந்த வழியாக வந்த ஏதோ ஒரு வாகனம் திவாகர் பைக் மீது மோதியது . இதில் திவாகர் அதே இடத்தில் இறந்தார். போலீசார் விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதை அறிந்த தர்ஷினி மருத்துவமனைக்குச் சென்று காதலன் உடலை பார்த்து கதறி அழுதார் . அங்கிருந்தவர்கள் அவருக்கு ஆறுதல் கூறினார்கள். இதையடுத்து பூங்கா நகரில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற தர்ஷினி அழுதபடி மிகவும் கவலையுடன் இருந்துள்ளார். காதலன் இறப்பை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இந்த நிலையில் தனது அறைக்குள் சென்று தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார் . இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.