பிரதமர் மோடியைக் கொல்லத் தயாராக இருங்கள்- காங்கிரஸ் மூத்த தலைவர் சர்ச்சை பேச்சால் கைது..!

ந்திய அரசியலமைப்புச் சட்டத்தை காக்க, பிரதமர் மோடியைக் கொல்லத் தயாராக இருங்கள் என சர்ச்சைக்குரிய வகையில் பேசிய மத்தியப்பிரதேச முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ராஜா பட்டேரியாவை மத்தியப் பிரதேச போலீஸார் இன்று கைது செய்தனர்.

தாமோ மாவட்டத்தில் உள்ள ஹதா நகரில் உள்ள அவரின் வீட்டில் ராஜா பட்டேரியா இருந்தபோது இன்று அவரை மத்தியப் பிரதேச போலீஸார் கைது செய்தனர்.

பன்னா மாவட்டத்தில் உள்ள பவாய் நகரில் நடந்த காங்கிரஸ்கூட்டத்தில் ராஜா பட்டேரியா சில நாட்களுக்கு முன் பங்கேற்றார் அப்போது அவர் பேசுகையில் “சாதி, மத, இன,மொழி அடிப்படையில் மக்களைப் பிரித்து தேர்தலில் மோடி வென்றுவிடுவார். தலித்துகள், சிறுபான்மை மக்கள் ஆபத்தில் உள்ளனர், அரசியலமைப்புச் சட்டம் காக்கப்பட வேண்டுமென்றால், மோடியைக் கொல்லத் தயாராக இருங்கள்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.

இதையடுத்து, காங்கிரஸ் தலைவர் ராஜா பட்டேரியா மீது மத்திய பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா உத்தரவின் பெயரில் போலீஸார் வழக்குகப்பதிவு செய்திருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை தாமோ மாவட்டத்தில், ஹதா நகரில் ராஜா பட்டேரியா அவரின் வீட்டில் இருந்தபோது அவரை போலீஸார் கைது செய்தனர். அவரை காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்துக்கு போலீஸார் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஆனால், ராஜா பட்டேரியா தான் பேசியதற்கு வீடியோவில் விளக்கம் அளித்துள்ளார். அதில் ” மோடியைக் கொல்ல தயாராக இருங்கள் என நான் கூறியது அவரைத் தோற்கடிக்க தயாராக இருங்கள் எனத் தெரிவித்தேன். அரசியலமைப்புச்ச ட்டத்தைக் காக்க மோடியைக் கொல்லத் தயாராக இருங்கள் என்று நான் கூறியதில் கொல் என்பதற்கு அர்த்தம் தோற்கடிப்பது” எனத் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் விடுத்துள்ள அறிக்கையில் ” பாரத் ஜோடோ யாத்திரையின் உண்மையான முகம் என்ன என்பது ராஜா பட்டேரியா பேச்சின் மூலம் தெரிய வருகிறது. பிரதமர் மோடியின் முன் காங்கிரஸ் தலைவர்களால் களத்தில் நேருக்கு நேர் நிற்க முடியவில்லை, அதனால்தான், காங்கிஸ் தலைவர் ஒருவர் மோடியைக் கொல்வது குறித்துப் பேசுகிறார். இது வெறுப்பின் உச்சம். காங்கிரஸ் கட்சியின் உண்மையான உணர்வுகள் வெளிப்பட்டுவிட்டது. சட்டம் தனது கடமையைச் செய்யும்” எனத் தெரிவித்திருந்தார்.