பேரூர் கோவில் கல்யாணிக்கு குளியல் தொட்டி- உற்சாகமாக குளித்து மகிழ்ந்த யானை..!

கோவையில் பிரசித்தி பெற்ற பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கல்யாணி யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. கல்யாணி யானை கடந்த 1996-ம் ஆண்டு பேரூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. யானையை பாகன் ரவி பராமரித்து வருகிறார். இந்த யானை கோவிலுக்கு வரும் குழந்தைகள் முதல் பெரியவர்களை வரை அனைவரையும் கவர்ந்து வருகிறது.
யானையை பார்க்கவே கோவிலுக்கு வரும் தனி கூட்டமும் இருக்கிறது. கல்யாணி யானைக்கு தற்போது 32 வயதாகிறது. இந்த நிலையில் பேரூர் கல்யாணி யானை குளிக்கவும், நடைபயிற்சி மேற்கொள்ளவும் அறநிலையத்துறை சார்பில் ரூ.60 லட்சம் நிதிஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து குளியல் தொட்டி அமைக்க பேரூர் கோவில் நிர்வாகத்தினர் பல பகுதிகளில் இடம் தேர்வு செய்து வந்தனர்.  கோவிலுக்கு அடுத்து அங்காளம்மன் கோவில் பின் பகுதியில் கோவிலுக்கு சொந்தமான 5.5 ஏக்கர் நிலப்பரப்பு தேர்வு செய்யப்பட்டது. இந்த பகுதியில் கல்யாணி யானை குளிக்க பெரிய அளவிலான குளியல் தொட்டி அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வந்தது. இதனைத் தொடர்ந்து யானை குளியல் தொட்டி 4 அடி உயரத்திற்கு 1,20,000 லிட்டர்கள் கொள்ளளவில் அமைக்கப்பட்டது. யானை குளியல் தொட்டி 10 மீட்டர் அகலம், 10 மீட்டர் நீளம், 1.8 மீட்டர் உயரம்.யானை நடைப்பாதை 300 மீட்டர் நீளம், 5 மீட்டர் அகலம், யானை செல்லும் பாதையின் சாய்வு தளம் 12.40 மீட்டர் நீளம், 420 மீட்டர் அகலம் என குளியல் தொட்டி கட்டப்பட்டுள்ளது. மேலும் குளியல் தொட்டியிலிருந்து தண்ணீர் வெளியேற்றும் மோனோ பிளாக் மோட்டார் மற்றும் யானை குளிப்பதற்கு ஷவர் பொருத்தப்பட்டுள்ளது.

இதேபோல் அதே பகுதியில் யானை நடைபயிற்சி மேற்கொள்ள மணலும், கிணற்றுமண்ணால் நடைபாதை அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு கல்யாணி யானை 3 மணி நேரம் குளியல் தொட்டியில் குளியல் போட உள்ளது. 10 கிலோ மீட்டர் தூரம் வரை தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள உள்ளது. இந்த யானை குளியல் தொட்டியை இன்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அதன் பின்னர் யானை குளியல் தொட்டியில் இறங்கி நீரில் விளையாடி ஆனந்த குளியல் போட்டது. இதனை அங்கிருந்தவர்கள் கண்டு ரசித்தனர்.இதனை தொடர்ந்து பேரூர் தமிழ் கல்லூரியில், பழனி, திருச்செந்தூர், மதுரை, திருவண்ணாமலை, ஸ்ரீரங்கம், திருவல்லிக்கேணி ஆகிய இடங்களில் உள்ள கோவில்களில்
அர்ச்சகர் மற்றும் ஓதுவார் பயிற்சி பள்ளியில் 84 மாணவர்கள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு சாந்தலிங்க அடிகளார் சிவ தீட்சை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் கலந்து கொண்டு சிவ தீட்சை வழங்கப்பட்டதற்கான சான்றிதழ்களை வழங்கினார். நிகழ்ச்சியில் கலெக்டர் கிராந்தி குமார் பாடி மற்றும் கோவில் நிர்வாகத்தினர் பலர் கலந்து கொண்டனர்.