பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதையில் தனியார் வாகனங்களுக்கு தடை – அதிர்ச்சியில் பக்தர்கள்.!!

பழனி கிரிவலப்பாதையில் வரும் 8ஆம் தேதி முதல் தனியார் வாகனங்களுக்குத் தடை விதிக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயில் கிரிவீதியில் இருந்த ஆக்கிரமிப்புகள், உயர்நீதிமன்ற கிளை உத்தரவுப்படி அகற்றப்பட்டது. மேலும் நீதிமன்றத்தின் உத்தரவுப்படி, கிரிவீதியில் அனைத்து தனியார் வாகனங்களும் சென்று வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு, வரும் வெள்ளிக்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.

இதுதொடர்பாக கோயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், உயர்நீதிமன்ற கிளை பிறப்பித்த இடைக்கால தீர்ப்பின் ஒரு பகுதியாக கிரிவீதியில் அனைத்து தனியார் வாகனங்கள் சென்று வரவும், நிறுத்தவும் மார்ச் 8ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. பக்தர்களின் வசதிக்காக மின் இழுவை ரயில் நிலையங்கள், ரோப்கார் நிலையம், படிப்பாதை வரை கோயில் நிர்வாகம் மூலம் பேட்டரி கார், மினிபஸ் ஆகியவை கட்டணமின்றி இயக்கப்பட உள்ளது.

மேலும், அனைத்து தனியார் வாகனங்களும் சுற்றுலா பஸ் நிலையம், கோசாலை பஸ் நிலையம் ஆகியவற்றில் கட்டணம் இல்லாமல் வாகனங்களை நிறுத்தி கொள்ளலாம். இதற்கிடையே, பழனி கிரிவீதியில் வாகனங்கள் நுழைவதைத் தடுக்கும் வகையில், இணைப்பு சாலைகளில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தற்போது கிரிவீதியின் 6 இணைப்பு சாலைகளில் தடுப்புக் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன.