பயணிகளின் கவனத்திற்கு.. கோவை வழியாக விஜயபுரா-கோட்டயம் வாராந்திர சிறப்பு ரயில் இயக்கம்- 2 ரயில்கள் நேரம் மாற்றம்..!

கோவை வழித்தடத்தில் கா்நாடக மாநிலம் விஜயபுரா-கேரள மாநிலம் கோட்டயம் இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படுவதாக ரயில்வே நிா்வாகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சேலம் ரயில்வே கோட்ட நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
நவம்பா் 21-ந் தேதி முதல் ஜனவரி 16-ந் தேதி வரை திங்கள்கிழமைகளில், கா்நாடக மாநிலம் விஜயபுராவில் இருந்து இரவு 11 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07385) புதன்கிழமைகளில் பிற்பகல் 2.20 மணிக்கு கோட்டயம் ரயில் நிலையத்தை சென்றடையும். இதேபோன்று நவம்பா் 23-ந் தேதி முதல் ஜனவரி 18-ந் தேதி வரை புதன்கிழமைகளில் கோட்டயத்தில் இருந்து மதியம் 3.30 மணிக்குப் புறப்படும் வாராந்திர சிறப்பு ரயில் (எண்: 07386) வியாழக்கிழமைகளில் இரவு 8.30 மணிக்கு விஜயபுராவை சென்றடையும். இந்த ரயிலானது, எா்ணாகுளம் டவுன், திருச்சூா், பாலக்காடு, கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம், பங்காரப்பேட்டை, கிருஷ்ணராஜபுரம், தும்கூா், திப்தூா், பிரூா், ஹரிஹா், ராணிபென்னூா், பாகல்கோட், அல்மட்டி உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.

இதேபோன்று கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ஆலப்புழா – சென்னை விரைவு ரயில், போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் நேரம் மாற்றப்பட்டுள்ளது.
கோவை, திருப்பூா், ஈரோடு, சேலம் வழித்தடத்தில் இயக்கப்படும் ஆலப்புழா- சென்னை விரைவு ரயில் (எண்: 22640) நவம்பா் 11-ந் தேதி முதல் ஆலப்புழாவில் இருந்து மாலை 4.05 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக மதியம் 3.40 மணிக்குப் புறப்படும். இந்த ரெயில் போத்தனூருக்கு இரவு 9.40 மணிக்கும், கோவைக்கு இரவு 9.55 மணிக்கும், திருப்பூருக்கு இரவு 10.35 மணிக்கும், ஈரோட்டுக்கு இரவு 11.20 மணிக்கும், சேலத்துக்கு இரவு 12.15 மணிக்கும், சென்னைக்கு மறுநாள் காலை 5.30 மணிக்கும் சென்றடையும்.

போத்தனூா் வழித்தடத்தில் இயக்கப்படும் மங்களூரு சென்ட்ரல் – சென்னை சென்ட்ரல் விரைவு ரயில் (எண்: 12602) மங்களூரு ரயில் நிலையத்தில் இருந்து பிற்பகல் 1.30 மணிக்குப் புறப்படுவதற்கு பதிலாக 1.35 மணிக்குப் புறப்படும்.
இந்த ரெயில் போத்தனூருக்கு இரவு 9.55 மணிக்கும், திருப்பூருக்கு 10.45 மணிக்கும், ஈரோட்டுக்கு 11.40 மணிக்கும் சென்றடையும். சென்னைக்கு மறுநாள் காலை 6.10 மணிக்கு சென்றடையும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.