தமிழ் காவியங்களை ஓவியமாக வரைந்து அசத்திய கோவை மாநகராட்சி – குவியும் பாராட்டுக்கள்..!

கோவையில் காந்திபுரம் நஞ்சப்பா சாலை, 100 அடி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மேம்பால தூண்களில் அரசியல் கட்சி, தனி நபர் உள்ளிட்ட பலர் எச்சரிக்கையையும் மீறி போஸ்டர்கள் ஒட்டுவதால், நகரின் தூய்மை மற்றும் அழகு கெடுவதாக பொதுமக்கள் ஆதங்கப்பட்டு வந்தனர்.

இதற்கு தீர்வு காணும் வகையாக ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் மேம்பால தூண்களில் சிலப்பதிகாரம் மணிமேகலை உள்ளிட்ட ஐம்பெரும் தமிழ் காவியங்களில் வரும் காட்சிகளை ஓவியங்களாக வரைய மாநகராட்சி முடிவு செய்தது. முதற்கட்டமாக கோவை காந்திபுரம் நஞ்சப்பா சாலையில் உள்ள மேம்பால தூண்களில் இருந்த போஸ்டர்களை அகற்றிவிட்டு சிலப்பதிகார காவியத்தில் வரும் காட்சிகள் தத்ரூபமாக வரையப்பட்டு வருகிறது. சுமார் நூறு தூண்களில் வரையப்படும் இந்த ஓவியங்களால் கோவை நகர் அழகு பெறுவது மட்டும் அல்லாமல் இன்றைய தலைமுறையினர் நமது தமிழ் காவியங்களை ஓவிய வடிவில் அறியக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.