குடிபோதையில் வாக்குவாதம்… தொழிலாளிக்கு கத்திகுத்து – நண்பருக்கு வலை..!

கோவை வெள்ளலூர் பாலாஜி நகரை சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). தொழிலாளி. இவர் அதே பகுதியை சேர்ந்த ஜோஹி (53) என்பவருடன் சேர்ந்து அடிக்கடி மது குடிப்பது வழக்கம். இதேபோன்று நேற்று இருவரும் மது வாங்கி குடித்தனர். குடிபோதையில் 2 பேரும் பேசிக்கொண்டிருந்தனர். இதில், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஒருவருக்கொருவர் தகாத வார்த்தைகளால் திட்டிக்கொண்டனர். இதனால், ஆத்திரமடைந்த ஜோஹி தான் வைத்திருந்த கத்தியால் முருகேசனை குத்தி விட்டு அங்கிருந்து தப்பினார். இதில், முருகேசனுக்கு கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக சென்றவர்கள் அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். இது குறித்து முருகேசன் போத்தனூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து தப்பியோடிய ஜோஹியை தேடி வருகின்றனர்.