பொள்ளாச்சி சரக்கு வாகனம் மீது தனியார் பஸ் மோதிய விபத்தில் மேலும் பெண் ஒருவர் பலி..!

கோவை:
பொள்ளாச்சி அருகே உள்ள கோபாலபுரத்தில் இருந்து பொள்ளாச்சி நோக்கி நேற்று முன்தினம் ஒரு தனியார் பஸ் வந்தது. பஸ்சை பொள்ளாச்சியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். கண்டக்டராக கரப்பாடியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (23) என்பவர் இருந்தார். மேலும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் உள்பட பஸ்சில் சுமார் 40 பேர் இருந்தனர். பொள்ளாச்சியில் இருந்து கோபாலபுரம் நோக்கி சென்ற சரக்கு வாகனத்தின் மீது எதிரே வந்த தனியார் பஸ் பயங்கரமாக மோதியது. இதில் பஸ் சாலையோரத்தில் இருந்த பள்ளத்தில் கவிழ்ந்தது. சரக்கு வாகனத்தை ஓட்டி வந்த டிரைவர் நடராஜன், அவருடன் வந்த கிட்டுசாமி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர். மேலும் 34 பேர் காயமடைந்தனர். இதற்கிடையில் கோவை அரசு ஆஸ்பத்திரியில் மேல்சிகிச்சைக்காக தாவளத்தை சேர்ந்த பார்வதி (48) என்பவர் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். இதனால் பலி எண்ணிக்கை 3-ஆக உயர்ந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர். மேலும் டிரைவர் மோகன்ராஜ் மீது அதிவேகமாக சென்று விபத்தை ஏற்படுத்துதல் உள்பட 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்து அவரை கைது செய்தனர்.