ரூ.900 கோடி ஹவாலா பணம்.. சிக்கிய அண்ணாநகர் கார்த்திக்- பாஜகவிடம் சமாதானமாகும் திமுக..!

மிழ்நாட்டின் முன்னணி கட்டுமானம் மற்றும் நில விற்பனை நிறுவனமான ஜி ஸ்கொயர் நிறுவனத்திற்கு சொந்தமான 100க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் கடந்த மூன்று நாட்களாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்த நிறுவனத்திற்கு உரிமையாளராக கருதப்படும் லோட்டஸ் பாலா என்பவரிடம் வருமான வரி துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. இந்த சோதனையானது மெகா சோதனையாக மாறி அண்ணா நகர் தொகுதி திமுக எம்எல்ஏ மோகன் மற்றும் திமுக ஐடி விங் மாநில துணைத்தலைவரும் ஜி ஸ்கொயர் நிறுவனத்தின் பங்குதாரருமான அண்ணா நகர் கார்த்திக் வீடுகளில் கடந்த மூன்று நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். ஜி ஸ்கொயர் நிறுவனம் மற்றும் திமுக எம்எல்ஏ வீடுகளில் நடத்தப்படும் வருமானவரித்துறை சோதனையானது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் பிரபல அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணா நகர் திமுக எம்எல்ஏ மோகனின் மகன் கார்த்திக் மூலம் சுமார் 900 கோடி ரூபாய் ஹவாலா பணம் கை மாறி உள்ளதாகவும் அதற்கான ஆதாரங்களை வருமானவரித்துறை அதிகாரிகள் கைப்பற்றி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ஜி ஸ்கொயர் நிறுவனத்தில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் ஸ்டாலின் குடும்பத்தினர் சர்வதேச பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. ஜி ஸ்கொயர் மற்றும் அதைச் சார்ந்த இடங்களில் சோதனை நடத்தி வரும் வருமானவரித்துறை அதிகாரிகள், மணல் கடத்தலில் ஈடுபடும் ராமச்சந்திரன், ரத்தினம் மற்றும் கரிகாலன் ஆகியோரிடம் இருந்து ஆண்டுக்கு 900 கோடி ரூபாய் பணம் வாங்கியதற்கான ஆதாரத்தை கைப்பற்றியுள்ளனர். அப்படி வசூலித்த 900 கோடியை அண்ணாநகர் கார்த்திக்கிடம் ஒப்படைத்துள்ளனர்.

அவர் அதை ஆடிட்டர் சண்முகராஜிடம் ஒப்படைத்துள்ளார். பின்னர் ஹவாலா ஆப்ரேட்டர்கள் மூலம் துபாய், கனடா மற்றும் ஹாங்காங் ஆகிய நாடுகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளது. இது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து மணல் கடத்தலில் ஈடுபட்ட மூவர் மீது வருமானவரித்துறை அதிகாரிகள் தங்கள் கவனத்தை திருப்பியுள்ளனர்.

குடியரசுத் தலைவரைச் சந்திப்பது என்ற போர்வையில் மு.க.ஸ்டாலின் டெல்லிக்கு திடீர் பயணம் மேற்கொண்டிருப்பது உண்மையில் பிரதமர் மோடி அல்லது அமித் ஷாவிடம் சந்திப்பு கேட்பதற்காகத்தான் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. குடும்பம் முழுவதும் கொந்தளித்து, வெள்ளைக் கொடியுடன் பாஜகவை அணுக முடிவு செய்துள்ளது.”என அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கரன் இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.