கோவையில் அரசு பஸ் மீது விழுந்த இரும்பு தூண்… நூலிழையில் உயிர் தப்பிய பயணிகள்..!

கோவை அரசு மருத்துவமனை அருகே, டவுன்ஹால் செல்லும் வழியில் அரசு பேருந்து மீது இரும்புத் தூண் விழுந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, உக்கடம் டவுன்ஹால் பகுதியில் இருக்கக்கூடிய லங்கா கார்னர் பகுதியில் பாலத்திற்கு மேலே ரயில் செல்லக்கூடிய இரும்பு பாதை அமைந்துள்ளது. பாலத்திற்கு கீழே வாகனங்கள் செல்லக்கூடிய பாதையாகவும் உள்ளது. நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் இந்த வழியாக கடந்து சென்று வருகிறது.

அப்பகுதியின் அருகே ரயில் நிலையம் மற்றும் அரசு மருத்துவமனை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம் போன்ற அரசு அலுவலகங்களும் அந்த பகுதியில் இயங்கி வருவதால் எப்போதும் பரபரப்பாக இருக்கக்கூடிய சாலையாகவே உள்ளது.

இன்று லங்கா கார்னர் பகுதியில் ரயில்வே பாலத்தின் அடியில் உள்ள இரும்புத்தூண் ஒன்று, அந்த வழியாக வந்த அரசு பேருந்தின் மீது எதிர்பாராத விதமாக விழுந்ததால் பேருந்தின் கண்ணாடி சுக்குநூறாக உடைந்தது, அதிர்ஷ்டவசமாக பயணிகளுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை.

இருப்பினும் பரபரப்பாக இயங்ககூடிய சாலையில் இந்த விபத்து நடந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது. உடனாடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது …சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் உடனாடியாக இரும்புதூணை அகற்றி விட்டு போக்குவரத்தையும் சரி செய்தனர்.