கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடும்… ஆளுநரின் கருத்துக்கு பதில் சொல்ல விரும்பவில்லை – ஓபிஎஸ் பேட்டி..!

சென்னை: கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக போட்டியிடும் என்றும், ஸ்டெர்லைட் போராட்டம் குறித்த ஆளுநரின் கருத்து தொடர்பாக பதில் சொல்ல விரும்பவில்லை என்றும் ஓ.பன்னீர் செல்வம் தெரிவித்தார்.

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னையில் நேற்று  (ஏப்.7) செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர் செல்வம், “எடப்பாடி பழனிசாமி கட்சி தொடர்பான கூட்டங்களைக் கூட்டுவது சட்டவிரோதம்.செயற்குழு, பொதுக்குழு என்று எதுவாக இருந்தாலும் அது சட்ட விரோதம்தான். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்பது தான் தற்போது வரை தேர்தல் ஆணையத்தில் உள்ளது. அது தான் செல்லும். இது தனி நீதிபதியின் தீர்ப்பு. நிரந்தர தீர்ப்பு இல்லை. சென்னை வரும் பிரதமரை வாய்ப்பு கிடைத்தால் சந்திப்பேன். இதுவரை நேரம் ஒதுக்கப்படவில்லை.” என்று கூறினார்.

ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து ஆளுநரின் கருத்து பற்றிய கேள்விக்கு, ‘பதில் சொல்ல விரும்பவில்லை’ என்று தெரிவித்தார். கர்நாடக தேர்தல் தொடர்பான கேள்விக்கு, கர்நாடக தேர்தலில் அதிமுக போட்டியிடும். வேட்பாளரை நிறுத்துவோம்” என்று தெரிவித்தார்.

அதிமுக பொதுச் செயலாளர் தொடர்பான கேள்விக்கு,”அதிமுக சட்ட விதிகளின்படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெற வேண்டும். அதற்கு முன்னதாக உறுப்பினர் படிவம் அளிக்கப்பட்டு, உறுப்பினர் அட்டை வழங்கப்பட்ட பிறகு, அடிப்படை தொண்டர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும். தொண்டர்களின் வாக்கு தான் பொதுச் செயலாளரை தேர்வு செய்யும். பொதுச் செயலாளர் தேர்வு முடிந்த பின்னர் தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டு, ஆணையம் அனுமதி அளித்த பிறகு தான் மற்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெறும். எனவே தற்போது நடைபெற்றுள்ள தேர்தல் சட்ட விதிகளுக்கு முரணானது.” என்று அவர் பதில் கூறினார்.