அதிமுக பொதுக்குழு வழக்கு: ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே தொடரும் … உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு..!!

அதிமுகவில் ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

கடந்த ஜூலை 11ஆம் தேதி நடந்த அதிமுக பொதுக்குழு கூட்டம் செல்லாது என்றும், அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் செல்லாது என்றும் அறிவிக்கக்கோரி ஓபிஎஸ் மற்றும் பொதுக்குழு உறுப்பினர் வைரமுத்து ஆகியோர் சார்பில் வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் நீதிபதி ஜி. ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தன. எடப்பாடி பழனிசாமி தரப்பில், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுவுக்கான நிகழ்ச்சி நிரல் ஜூன் 27ல் தயாரிக்கப்பட்டதாகவும், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் காலாவதியானதால் தலைமைக்கழக நிர்வாகிகள் மூலம் பொதுக்குழு நோட்டீஸ், ஜூலை 1ல் பொதுக்குழு உறுப்பினர்களுக்கு அழைப்பிதழ் அனுப்பப்பட்டதாகவும், பொதுக்குழு சட்டப்படி தான் கூட்டப்பட்டது எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

பன்னீர்செல்வம் தரப்பில், ஜூலை 11 பொதுக்குழு கூட்டத்துக்கு அழைப்பு விடுத்த நிரந்தர அவைத்தலைவர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளரால் நியமிக்கப்பட்டவர் அல்ல என விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் கடந்த 11ஆம் தேதி நிறைவடைந்த நிலையில், தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்த நிலையில் தீர்ப்பு வாசித்த நீதிபதி, ‘ஜூன் 23ஆம் தேதி இருந்த நிலையே நீடிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் இணைந்து தான் பொதுக்குழு, செயற்குழுவை கூட்ட வேண்டும். தனி கூட்டம் கூட்டக் கூடாது. பொதுக்குழு கூட்ட ஆணையரை நியமிக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டுள்ளார்.