லோக்சபா தேர்தல் கூட்டணி பற்றியோ.. பாஜக பற்றியோ… பொது வெளியில் விமர்சனம் செய்ய வேண்டாம் – எடப்பாடி அதிரடி உத்தரவு.!!

சென்னை: லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்தோ, பாஜக பற்றியோ அதிமுக மாவட்ட செயலாளர்கள், நிர்வாகிகளுக்கு பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

பாஜக உடன் கூட்டணி முறிந்து விட்டதாக ஜெயக்குமார் கூறியுள்ள நிலையில் பொதுவெளியில் எதைப்பற்றியும் பேச வேண்டாம் என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு, கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜகவுடன் கூட்டணி அமைத்தது. அப்போது, அதிமுக கூட்டணியில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் 5 இடங்கள் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டது. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுடன் சேர்த்து நடத்தப்பட்ட சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் பாஜக அதிமுகவுக்கு ஆதரவளித்தது.

ஆனால், நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் தேனி தொகுதியை தவிர மீதம் உள்ள 39 தொகுதியையும் திமுக – காங்கிரஸ் கூட்டணி கைப்பற்றியது. இதன் மூலம் அந்த தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி பெரும் தோல்வியை சந்தித்தது. எனினும், ஊரக உள்ளாட்சித் தேர்தல், கிராமப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் அதிமுக – பாஜக கூட்டணி தொடர்ந்தது.

2021ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இந்த 20 இடங்களில் கோவை தெற்கு, மொடக்குறிச்சி, நாகர்கோவில், நெல்லை ஆகிய தொகுதிகளை கைப்பற்றி, 20 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சட்டசபைக்குள் நுழைந்தது பாஜக.

அண்ணாமலை தலைவராக நியமிக்கப்பட்ட பிறகு நடந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக உடனான தொகுதி பங்கீடு இழுபறியானதால் தமிழகத்தில் தனித்து போட்டியிட்டது பாஜக. அந்த தேர்தலில் மாநகராட்சி வார்டுகள், நகராட்சி, பேரூராட்சி வார்டுகள் என மொத்தம் 308 இடங்களில் வென்றது பாஜக. அதே நேரத்தில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு ஆதரவாக செயல்பட்டது பாஜக.

தமிழகத்தில் அதிமுக தான் பெரிய கட்சி, அதனால் எடப்பாடி சொன்னதில் எந்த குழப்பமும் இல்லை. அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் என்று கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதமே பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கூறியிருந்தார்.

இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் பாஜக ஐடி விங் தலைவர் நிர்மல்குமார் அண்மையில் அதிமுகவில் இணைந்தார். இந்நிலையில் நிர்மல்குமார் தலைமையில் ஏராளமான பாஜகவினர் அதிமுகவில் இணைந்தனர். அடுத்தடுத்து அதிமுகவில் இணைந்த பல்வேறு நிர்வாகிகள் இணைந்துள்ளதால் பாஜக தலைமைக்கும் அதிமுக தலைமைக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்தது.

இதனையடுத்து அண்ணாமலை ஒவ்வொரு வினைக்கும் எதிர்வினை உண்டு என்று கூறினார். பாஜகவினர் எடப்பாடி பழனிச்சாமியின் போட்டோக்களை எரித்தனர். அதே நேரத்தில் அண்ணாமலையின் போட்டோக்களை பாஜகவினர் எரித்தனர். மாறி மாறி அதிமுக, பாஜக தலைவர்கள் பேட்டி அளித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. அதே நேரத்தில் அதிமுக நிர்வாகிகளும் பாஜக நிர்வாகிகளும் கூட்டணி நீடிப்பதாகவே கூறி வந்தனர்.

2024ஆம் ஆண்டு நடைபெற உள்ள லோக்சபா தேர்தலை அதிமுகவும் பாஜகவும் இணைந்து எதிர்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கடந்த மார்ச் மாதம் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அண்ணாமலை மிகப்பெரிய புயலை கிளப்பினார். தமிழகத்தில் நாம் தனியாக இருந்தால் மட்டுமே கட்சியை வளர்க்க முடியும். அதிமுக உடன் கூட்டணி என்ற நிலைப்பாட்டை எடுத்தால், தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு சாதாரண தொண்டனாக இருப்பேன். பாஜகவை வளர்த்தெடுக்கத்தான் பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன். எனக்கு உரிய சுதந்திரம் அளிக்க வேண்டும் என்றார்.

தமிழ்நாட்டில் பாஜகவை வளர்ப்பதற்குரிய வெற்றி பெற வைப்பதற்குரிய உத்திகள் என்னிடம் இருக்கின்றன. என் ஸ்டைலில் செயல்பட முடியாத போது நான் ராஜினாமா செய்து விட்டு ஒரு தொண்டனாகவே இருப்பேன் என்று கூறினார். அதிமுக பாஜக தலைவர்கள் இருவரும் மாறி மாறி பரஸ்பரம் தங்கள் தரப்பு கருத்துக்களை காரசாரமாகவே பதிவு செய்து வந்தனர். ஊடங்களில் இதுவே விவாதப்பொருளானது.

இந்த சூழ்நிலையில்தான் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அமித் ஷா, தமிழ்நாட்டில் பாஜக முழு வலிமை இன்றி உள்ளது. பாஜகவை வலுப்படுத்துவதற்கான பணிகளை செய்து வருகிறோம். பாஜகவின் பூத் கமிட்டியை வலுப்படுத்த பணிகளை செய்து வருகிறோம். அதில் குறிப்பிடத்தக்க அளவில் நாங்கள் முன்னேற்றமும் அடைந்து இருக்கிறோம் என்றார்.

தமிழ்நாட்டில் நாங்கள் கூட்டணியில்தான் இருக்கிறோம். தமிழ்நாட்டில் நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்து இருக்கிறோம், என்று அமித் ஷா குறிப்பிட்டு உள்ளார். இதை வழி மொழிந்த எடப்பாடி பழனிச்சாமியும். பாஜக கூட்டணியில் அதிமுக தொடர்வதாக அறிவித்தார்.

இந்த சூழ்நிலையில்தான் பேரறிஞர் அண்ணா குறித்த தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலையின் விமர்சனத்தால் அதிமுக- பாஜக இடையே மோதல் நீடித்தது.

இந்த மோதலின் தொடர்ச்சியாக இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக மூத்த தலைவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், அதிமுக கூட்டணியில் பாஜக இல்லை. எங்கள் கட்சியின் முடிவைத்தான் நான் அறிவிக்கிறேன். இது என் தனிப்பட்ட கருத்து இல்லை, இது கட்சியின் ஒட்டுமொத்த முடிவு. இனி அண்ணாமலை எங்கள் தலைவர்களை விமர்சித்தால், கடுமையான எதிர்ப்பை சம்பாதிப்பார் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதனையடுத்து நேற்றைய தினம் தமிழ்நாடு முழுவதும் அதிமுக நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பாஜக பற்றியும் அண்ணாமலை பற்றியும் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. பொள்ளாட்சி ஜெயராமன், எஸ்.பி வேலுமணி, ஆர்.பி உதயகுமார் ஆகியோர் தேர்தல் கூட்டணி பற்றி பேசினர்.

ஆனால் தமிழக பாஜக நிர்வாகிகள் யாரும் தேர்தல் கூட்டணி பற்றி பேசவோ, விமர்சனம் செய்யவோ வேண்டாம் என டெல்லி தலைமை அறிவுறுத்தியது.

இந்த நேரத்தில் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையோ கூட்டணி சிறப்பாக இருப்பதாகவும் எடப்பாடி பழனிச்சாமியுடன் தான் பேசிக்கொண்டிருப்பதாகவும் கூறினார் அண்ணாமலை.

இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், தேர்தல் கூட்டணி பற்றியோ, பாஜக பற்றியோ பொதுவெளியில் பேசவோ விமர்சனம் செய்யவோ வேண்டாம் என நிர்வாகிகளுக்கும் மாவட்ட செயலாளர்களுக்கும் உத்தரவிட்டுள்ளார். லோக்சபா நடைபெறுவதற்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் அதிமுக பாஜக கூட்டணியில் முறிவு ஏற்பட்டுள்ளது. இது பற்றி பொதுவெளியில் பேசி மேலும் சிக்கலை உருவாக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் எடப்பாடி பழனிச்சாமி.