அரசுப் பள்ளிகளில் தமிழ் பாட வேளையை குறைக்கும் முடிவை கைவிடுக- பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்..!!

சென்னை: தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில்,தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும். முன்பிருந்தவாறே வாரத்திற்கு 7 பாடவேளைகளை தமிழுக்கு ஒதுக்க வேண்டும்.

தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.இதுதொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில்,’தமிழகத்தில் அரசு பள்ளிகளில் 6 – 10 வகுப்புகளுக்கான தமிழ் மொழிப் பாடத்திற்கான பாடவேளைகளின் எண்ணிக்கை ஏழிலிருந்து ஆறாக குறைக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வுகளில் தமிழ்ப் பாடத் தேர்ச்சி விகிதம் குறைந்து வரும் வேளையில், இந்த முடிவு மிகவும் தவறானதாகும்.

வாரத்திற்கு ஒரு பாடவேளை நீதிபோதனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்க, தேவையான நடவடிக்கை. அதற்காக ஆங்கில பாடவேளையை குறைத்ததுடன் நிறுத்தியிருக்கலாம். தமிழ் பாடவேளையையும் குறைத்திருக்கத் தேவையில்லை. அது தமிழுக்கு செய்யும் அவமரியாதை.எனவே, தமிழ் பாடவேளையை குறைக்கும் முடிவை கைவிட வேண்டும். முன்பிருந்தவாறே வாரத்திற்கு 7 பாடவேளைகளை தமிழுக்கு ஒதுக்க வேண்டும். தமிழ் மொழியை இலக்கணப் பிழையின்றி எழுதுவதற்கான சிறப்புப் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்க வேண்டும்’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.