30 ரூபாய் கடனுக்காக தொழிலாளிக்கு அடி உதை ..!

கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர் ரவி (வயது 56). இவர் அவினாசி ரோட்டோரம் பிளாட்பாரத்தில் தங்கி கூலி வேலைக்கு சென்று வருகிறார்.

இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது அருகே பிளாட்பாரத்தில் வசித்து வரும் ராஜ்குமார் (46) என்பவரிடம் ரூ.30 கடன் வாங்கினார். அந்த பணத்தை அவர் நீண்ட நாட்களாக திருப்பி கொடுக்காமல் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், சம்பவத்தன்று ரவியிடம், ராஜ்குமார் தன்னிடம் கடன் வாங்கிய ரூ.30-யை கொடுக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு ரவி தன்னிடம் தற்போது பணம் இல்லை. பிறகு தருகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது. இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் தகாத வார்த்தைகளால் திட்டி ரவியை அடித்து உதைத்தார்.
இதில் காயமடைந்த ரவியை அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இது குறித்து ரவி ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ரேஸ்கோர்ஸ் போலீசார் ராஜ்குமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.