வாகனம் மோதி உயிரிழந்த தூய்மை பணியாளர் உடலை வாங்க மறுத்து சக தூய்மை பணியாளர்கள் போராட்டம்..!

கோவை மாநகராட்சி கவுண்டம்பாளையம் பகுதியில் தூய்மை பணியாளராக உள்ள சித்ரா(48) என்பவர் பணிக்கு வரும்போது தனியார் வாகனம் மோதி சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது உடல் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் உடற்கூறு ஆய்விற்காக எடுத்து செல்லப்பட்டது. இந்நிலையில் சித்ராவின் உடலை வாங்க மறுத்து சக தூய்மை பணியாளர்கள், மற்றும் அவரது குடும்பத்தினர் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு போராட்டம் மேற்கொண்டு உள்ளனர். போராட்டம் மேற்கொண்டுள்ள அவர்கள் உயிரிழந்த சித்ராவின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கூறி வருகின்றனர்.

இந்நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை புரிந்துள்ள சமூக நீதிக் கட்சி தலைவர் பன்னீர்செல்வம் அவர்களுடன் சேர்ந்து போராட்டம் மேற்கொண்டுள்ளார்.