கோவை ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய். மகன், மகள் 3 பேர் தற்கொலை..

கோவை நஞ்சுண்டாபுரம், வெங்கிட்டாபுரம் அருகே நேற்று ரயில் தண்டவாளத்தில் 3 பேரின் உடல் கிடப்பதாக போத்தனூர் ரெயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு தண்டவாளத்தில் அருகே கிடந்த 3 பேரின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அத்துடன் அவர்கள் யார் ? எந்த ஊரை சேர்ந்தவர்கள் ? என்பது குறித்து விசாரணை நடத்தினார்கள். 3 பேரின் உடல் கிடந்த இடத்தின் அருகே ஒரு பை கிடந்தது. அந்த பையை கைப்பற்றி உயிரிழந்த நபர்கள் குறித்து விசாரணை நடத்தினார்கள். அதில் அவர்கள் சென்னை அடையாறு பகுதியைச் சேர்ந்த வரலட்சுமி (வயது 45) அவரது மகன் யுவராஜ் (வயது 16) மகள் ஜனனி (வயது 15 )என்பது தெரிய வந்தது. கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு புறப்பட்ட 3 பேரும் நேற்று காலை போத்தனூர் ரயில் நிலையம் வந்துள்ளனர். அவர்கள் 3 பேரும் ரெயில் நிலையத்திலிருந்து தண்டவாளம் வழியாக நடந்து சென்று வெங்கிட்டாபுரம் அருகே வந்து கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய். மகன் ,மகள் என 3 பேரும் ரெயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. குடும்பப் பிரச்சினையா? அல்லது வேறு எதுவும் காரணமா? என போத்தனூர் ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள் .இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது..