எங்கள் பொதுச் செயலாளருக்கு கிப்ட் காத்திருக்கிறது – விஜயபாஸ்கர்.!!

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா தன் சொந்த ஊரான புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அடுத்துள்ள குழந்திரான்பட்டு அரசு உயர்நிலைபள்ளியில் அமைக்கப்பட்டிருந்த வாக்கு சாவடியில் தனது வாக்கை பதிவு செய்தார். இதைத் தொடர்ந்து, வேட்பாளர் கருப்பையா திருச்சியில் உள்ள புனித சிலுவை கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவை பார்வையிட்டார். அப்போது, முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர், மாநிலங்களவை உறுப்பினர் ரத்தினவேலு, மாநகர மாவட்ட செயலாளர் ஸ்ரீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது :- பொதுச் செயலாளர் வேண்டுகோளுக்கிணங்க திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் ஒற்றை விரலால் வாக்காளர்கள் ஓங்கி அடித்துள்ளனர்.
வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டையில் வாக்களித்து விட்டு திருச்சி பகுதி முழுவதையும் சுற்றி பார்த்து வருகிறார். இரட்டை இலை வேட்பாளர் கருப்பையா இங்கே..? துரை வைகோ எங்கே. அவர் சென்னையில் வாக்களித்தார். அல்லது விருதுநகர் கலிங்கம்பட்டியில் வாக்களித்தார் என தொலைக்காட்சியும் பார்க்கவில்லை. இதே நிலைமைதான் ஏற்படும் என்பதை உணர்ந்து தான், மண்ணை சார்ந்தவரை உங்களோடு இணைக்க கருப்பையா வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
எவ்வளவு தான் அவர்கள் ரீசார்ஜ் செய்தாலும், அவங்க அவுட் ஆப் ரிச்சுக்கு சென்று விடுவார்கள். தொடர்பு எல்லைக்குள் எப்போதும் இருக்கக்கூடிய கருப்பையா அவர்களுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது. சர்ப்ரைஸ் கிப்ட், யாரும் எதிர்பாராத வெற்றி என்ற கிப்ட்டை நாங்கள் பொதுச் செயலாளருக்கு ஒப்படைப்போம் நீங்கள் T.R பாணியில் ரைமிங்கா பேசுகிறீர்கள் என்ற கேள்விக்கு, எங்கள் செயல்பாடும் அப்படித்தான் வேகமாக என நகைச்சுவையாக பதில் அளித்தார்.