கோவையில் 2வது முறை வாக்களிக்க முயன்ற நபர் கைது..!

கோவை நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் திருநாவுக்கரசு (வயது 52). இந்நிலையில் நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் கோவை மக்களவைத் தொகுதி, நல்லாம்பாளையம் மாநகராட்சி நடுநிலை பள்ளி பூத் எண் 145 ல் வாக்களிக்க சென்ற போது கையில் மை வைக்கும் ஊழியரிடம் வலது கை ஆள்காட்டி விரலை காண்பித்து உள்ளார்.

அப்போது அங்கு இருந்து அதிகாரிகள் இடது கை ஆள்காட்டி விரலை பார்க்கும் பொழுது அவர் ஏற்கனவே ஓர் இடத்தில் வாக்களித்து விட்டு இரண்டாவது முறையாக இங்கு வாக்களிக்க வந்தது தெரிய வந்து உள்ளது.

இதனைத் தொடர்ந்து தேர்தல் நடத்தும் அதிகாரி லதா மகேஸ்வரி கவுண்டம்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் திருநாவுக்கரசை கைது செய்து விசாரணை நடத்தினர்.

அப்போது தனக்கு காந்திபுரம் மற்றும் நல்லாம்பாளையம் ஆகிய இரண்டு இடங்களில் ஓட்டு இருந்ததாகவும் காந்திபுரம் பகுதியில் வாக்களித்து விட்டு நல்லாம்பாளையம் வந்ததாக தெரிவித்து உள்ளார்.

அதனை தொடர்ந்து திருநாவுக்கரசின் மீது 171(D) மற்றும் 171 F(2) ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்த போலீசார் பின்னர் அவரை பிணையில் விடுவித்தனர்.