61 தடவை திருட்டு வழக்கில் கைதாகி சிறைக்கு சென்ற பிரபல கொள்ளையன் மீண்டும் கைது..!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரம் காவல் நிலைய சிறப்பு இன்ஸ்பெக்டர் ஜோதிமணி போலீஸ்காரர் கோட்டைசாமி ஆகியோர் நேற்று அதிகாலையில் மகாலிங்கபுரம் ரவுண்டானா பகுதியில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த வழியாக மொபட்டில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தினர். அவர் நிற்காமல் சென்றார். எனவே அவரை பைக்கில் துரத்திச் சென்று பிடித்தனர். விசாரணையில் அவர் புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கிபை சேர்ந்த லட்சுமணன் ( வயது 44) என்பது தெரியவந்தது. மேலும் இவர் நேற்று முன்தினம் நெகமம் போலீசில் உள்ள திருட்டு வழக்கில் ஆஜராக பொள்ளாச்சி கோர்ட்டுக்கு வந்துள்ளார். அப்போது அரசு ஆஸ்பத்திரியில் நிறுத்தப்பட்டிருந்த மொபட்டை திருடி சென்றது தெரிய வந்தது. மேலும் இவர் புளியம்பட்டியில் உள்ள டீக்கடையில் பூட்டை உடைத்து பணம் ரூ 1270 மற்றும் கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்ட ஹார்ட்டிஸ்க் போன்றவற்றை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இது குறித்த புகாரின் பேரின் போலீசார் போலீசார் வழக்கு பதிவு செய்து லட்சுமணனை நேற்று கைது செய்தனர். அவரிடம் இருந்து முகமூடி, கத்தி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது . இதற்கிடையில் கைதான லட்சுமணன் தனது 19-வது வயதில் திருட ஆரம்பித்தாராம். கடந்த 25 ஆண்டுகளாக திருட்டில் ஈடுபட்டு வருகிறார் . சின்ன சின்ன திருட்டுக்கள் குறித்து பெரும்பாலும் யாரும் புகார் கொடுக்க மாட்டார்கள் என்ற எண்ணத்தில் சிறிய அளவிலான திருட்டில் மட்டும்தான் ஈடுபடுவார் . பொள்ளாச்சி பகுதியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் ஒரு கிலோ வெள்ளிப் பொருட்களை திருடி உள்ளார். இதுதான் அதிக மதிப்பு கொண்ட திருட்டாகும். இவர் தற்போது 61 வது முறை திருட்டு வழக்கில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.