கோவை ஓட்டலில் தொழிலதிபர் மனைவியிடம் ரூ 5 லட்சம் மதிப்புள்ள வைர பிரேஸ்லெட் திருட்டு..!

கோவை பீளமேடு ,நேரு நகர் மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசிப்பவர் சங்கர் ஆனந்த் ( வயது 42 )தொழிலதிபர். இவரது மனைவி ஹேமலதா ( வயது 39) நேற்று முன்தினம் (ஞாயிறு) விடுமுறை என்பதால் ஹேமலதா தனது 2 மகன்களுடன் கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலுக்கு காரில் சாப்பிட சென்றார் .பின்னர் 3 பேரும் அங்கு சாப்பிட்டு முடித்தனர். ஞாயிற்றுக்கிழமை என்பதால் ஓட்டலில் கூட்டம் அதிகமாக இருந்தது. சாப்பிட்டு முடித்த ஹேமலதா தனது மகன்களுடன் ஓட்டலை விட்டு வெளியே வந்தார். அப்போது அவரது கையில் இருந்த வைர கைச் செயினை காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் ஓட்டலுக்குள் சாப்பிட்ட இடத்துக்கு ஓடிச்சென்று பார்த்தார். அத்துடன் ஓட்டல் ஊழியர்களிடம் கூறி தேடிப்பார்த்தார் .ஆனால் கிடைக்கவில்லை. அதன் மதிப்பு ரூ. 5 லட்சத்துக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. இது குறித்த அவர் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அத்துடன் அந்த ஓட்டல் ஊழியர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டது. அந்த ஓட்டலில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறும்போது அந்த ஓட்டலில் ஞாயிற்றுகிழமை கூட்டம் அதிகமாக இருந்ததால் கூட்டம் நெரிசலை பயன்படுத்தி மர்ம ஆசாமிகள் ஹேமலதா அணிந்திருந்த கை செயினை திருடியிருக்கலாம் என்றனர்.