பூண்டி வெள்ளிங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் திடீர் மரணம் ..

கோவை பீளமேடு ,கோல்டுவின்ஸ் பக்கமுள்ள தொட்டிபாளையம் பிரிவை சேர்ந்தவர் பாலாஜி தேவராஜ் (வயது 49) டிபார்ட்மெண்ட் ஸ்டோர் நடத்தி வந்தார்.இவர் பூண்டி வெள்ளியங்கிரி கோவிலுக்கு மாலை போட்டு 52 நாட்கள் விரதம் இருந்தார் .இதையடுத்து தென்கைலாய மலை பக்தி பேரவை சிறப்பு அனுமதி பெற்று 150 பேருடன் பூண்டி வெள்ளிங்கிரி மலைக்குச் சென்றார் . நேற்று முன் தினம் அதிகாலை 4 மணி அளவில் குழுவினருடன் மலை ஏற தொடங்கினார்கள் . காலை 8 மணி அளவில் அவர்கள் 3-வது மலை ஏறிக்கொண்டிருந்தனர். அப்போது அவருக்கு திடீர்
நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதனால் அவர்களுடன் சென்ற பக்தர்கள் அவரை உடனடியாக அடிவாரத்துக்கு தூக்கி வந்தனர்.அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து ஆலந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.