நாடகம் பார்த்த 2 சிறுவர்களுக்கு மரண தண்டனை விதித்த கொடூர நாடு..!

தென் கொரிய நாடகங்கள் மற்றும் திரைப்படங்களைப் பார்த்ததாக கூறி, இரண்டு சிறுவர்களுக்கு வடகொரிய ராணுவம் மரண தண்டனை நிறைவேற்றியதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

வடகொரியாவில் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதளங்களுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்நாட்டு அரச ஊடகம் சொல்லும் செய்தியை மட்டுமே மக்கள் பார்க்கவும், கேட்கவும் வேண்டும் என்ற விதிமுறைகள் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், தென்கொரிய திரைப்படங்கள், நாடகங்கள், இசை ஆகியவற்றின் வீடியோக்கள், சிடிக்கள் போன்றவற்றை விற்பனை செய்தாலோ, அவற்றைப் பார்த்தாலோ, அவை குற்றமாகக் கருதப்பட்டு, பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என்ற கடுமையான சட்டத்தை கொண்டு வந்தார்.

இந்நிலையில் வடகெரியாவைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய இரண்டு சிறுவர்கள் தென்கொரிய நாடகத்தைப் பார்த்ததாக குற்றம் சாட்டப்பட்டு, வடகொரிய இராணுவத்தினரிடம் சிக்கினர். விசாரணையில் அந்த சிறுவர்கள் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வடகொரியாவின் ரியாங்க்காங் மாகாணத்தில் வைத்து, பொதுமக்கள் முன்னிலையில் இரண்டு சிறுவர்களும், வடகொரிய இராணுவத்தினரால் சுட்டுக்கொல்லப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வட கொரியாவின் இந்த செயலுக்கு பல்வேறு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த கொலை சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடைபெற்ற நிலையில், இதுபற்றிய தகவல்கள் கடந்த வாரம் வெளியாகியுள்ளன.