கோவை எல்லன் மருத்துவமனைக்குள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கில் மேலும் ஒருவர் கைது..!

கோவை காந்திபுரம் 100 அடி ரோட்டில் எல்லன் மருத்துவமனை உள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக டாக்டர். ராமச்சந்திரன் ( வயது 75) உள்ளார் . இந்த மருத்துவமனையை சென்னையை சேர்ந்த டாக்டர் .உமாசங்கர் வாடகைக்கு எடுத்து சென்னை மருத்துவமனை என்று பெயர் மாற்றம் செய்தார் .இந்த நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தி மருத்துவமனையை சூறையாடியது. இதுகுறித்து டாக்டர் ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் பேரில் டாக்டர். உமா சங்கர், மருதவாணன் ஆகியோர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். ஜாமினில் வெளியே வந்த டாக்டர் உமாசங்கர் விபத்தில் மர்மமான முறையில் பலியானார். இதற்கிடையில் தனியார் மருத்துவமனைகள் புகுந்து தாக்குதல் நடத்திய வழக்கு கோவை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தி இந்த வழக்கு தொடர்பாக மருத்துவமனை நிர்வாக இயக்குனர் டாக்டர்.எல்லன் ராமச்சந்திரன் உட்பட 13 பேரை கைது செய்தனர் .இந்த வழக்கு தொடர்பாக சாய்பாபா காலனியில் உள்ள வழக்கறிஞர் ராஜேந்திரன் வீடு, காந்திபுரத்தில் உள்ள அவரது அலுவலகம், லாட்ஜ் உட்பட 5 இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தினார்கள்.இந்த நிலையில் வக்கீல் ராஜேந்திரனிடம் மேலாளராக பணிபுரிந்து வந்த கணபதியை சேர்ந்த ஆர் .பிரபு (வயது 38) என்பவர் கேரள மாநிலம் கொச்சியில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது .போலீசார் நேற்று அங்கு விரைந்து சென்று பிரபுவை நேற்று கைது செய்தனர் .இவர் கோவைக்கு அழைத்து வரப்பட்டார்.இவரிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.