ஆன்லைனில் இரட்டிப்பு இலாபத்திற்கு ஆசைப்பட்டு 8 லட்சத்தை இழந்த கோவை இளைஞர்..!

கோவை சரவணம்பட்டி நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் யுவ பிரசாந்த். இவர் ஐடி கம்பெனியில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு தெரியாத எண்ணில் இருந்து ஆன்லைன் டாஸ்க் செய்து பணம் சம்பாதிக்கலாம் என ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அதற்கு முதலில் பணம் செலுத்த வேண்டும் எனவும் எவ்வளவு பணம் செலுத்துகின்றோமோ அதனை காட்டிலும் அதிகப்படியான லாபம் ஈட்டலாம் என தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனை நம்பிய அவர் கொஞ்சம் கொஞ்சமாக சுமார் 8 லட்சத்து 12 ஆயிரம் ரூபாயை ஆன்லைன் மூலம் அனுப்பியுள்ளார். ஆனால் அவர் அனுப்பிய பணமும் லாபமும் திரும்ப கிடைக்காத நிலையில், தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இது குறித்து கோவை மாநகர சைபர் கிரைம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்துள்ள சைபர் க்ரைம் போலிசார் இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..