காரும், அரசு பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து – மனைவி பலி, செய்தியாளர் படுகாயம்..

செம்பட்டி அருகே திண்டுக்கல் சாலை ஆதிலட்சுமிபுரம் என்ற இடத்தில் வெள்ளிக்கிழமை காரும், அரசு பேருந்தும்  நேருக்கு நேர் மோதிய விபத்தில் கணவர் படுகாயமடைந்தார். அவரது மனைவி சம்பவ இடத்திலே பலியானார்.
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த திண்டுக்கல் சாலை ஆதிலட்சுமிபுரம் அருகே தேனியிலிருந்து  திண்டுக்கல் நோக்கி சென்ற அரசு பேருந்தும் திண்டுக்கல்லில் இருந்து வத்தலக்குண்டு நோக்கி சென்ற  கார் மீது நேருக்கு நேர் மோதி  விபத்து ஏற்பட்டது. கார் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.  விபத்தில் காரை ஓட்டி வந்த பிரபல தனியார்  நிறுவன  வத்தலக்குண்டு செய்தியாளர் ஸ்தானிகபிரபு  (47)  படுகாயமடைந்தார். அவரது மனைவி சத்தியபிரியா (42) சம்பவ இடத்திலே உடல் நசுங்கி பலியானார். காரில் பலியான சத்தியபிரியா உடலை அப்பகுதி மக்கள் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பிறகு மீட்டனர்.  படுகாயம் அடைந்த செய்தியாளர் ஸ்தானிகபிரபுவை  காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் உதவியுடன் காவல்துறை வாகனத்தில் எடுத்துச்சென்று  மருத்துவமனைக்கு தீவிர சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர்.
இந்த விபத்து குறித்து செம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து பலியான சத்தியபிரியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர். விபத்தில் சிக்கிய செய்தியாளர் ஸ்தானிகபிரபுக்கு பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் இரண்டு மகன்கள் உள்ளனர்.  இந்நிலையில், அந்த வழியாக வத்தலக்குண்டு நோக்கி சென்ற ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை  அமைச்சர் இ.பெரியசாமி செம்பட்டி காவல் ஆய்வாளர் செந்தில்குமாருக்கு தகவல் தெரிவித்து உடனடியாக  நடவடிக்கை எடுக்க போலீசருக்கு உத்தரவிட்டார்.  இந்த விபத்து சம்பவம்  இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.