டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணித்த 637 பேர் பிடிபட்டனர்- ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அபராதம்..!

ரெயிலில் டிக்கெட் எடுக்காத 637 பேர் பிடிபட்டனர் ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் அபராதம் ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் பயணித்த 637 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை ரெயில் நிலையம் வழியாக ஏராளமான ரெயில்கள் வந்து செல்கின்றன. இந்த ரெயில்களில் சிலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதாக ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. மேலும் பொருட்களை விற்பனை செய்வதாக கூறி சிலர் டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்வதாகவும் புகார் செய்யப்பட்டது.

இதைத் தொடர்ந்து ரெயில்களில் 21 டிக்கெட் பரிசோதகர்கள் திடீரென்று சோதனை நடத்தினர். அவர்கள், நீலகிரி எக்ஸ்பிரஸ், கோவை – மேட் டுப்பாளையம் ரெயில், ஈரோடு பாலக்காடு ரெயில், ஆலப்புழா தன்பாத் ரெயில், சென்னை- கோவை எக்ஸ்பிரஸ், சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ், ரெயில்களில் சோதனை நடத்தினர்.

இதில், சேலம் கோட்டத்துக்குட்பட்ட கோவை, மேட்டுப்பாளையம், சேலம், ஈரோடு, கரூர் ஆகிய ரெயில் நிலையங்களில் சோதனை நடத்தப்பட்டது. டிக்கெட் பரிசோதகர்களுக்கு உதவியாக ரெயில்வே அதிகாரிகளும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.

டிக்கெட் எடுக்காமல் ரெயிலில் பயணித்த 637 பேர் பிடிபட்டனர். அவர்களுக்கு மொத்தம் ரூ.3 லட்சத்து 60 ஆயிரத்து 820 அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது.

இதுபோல் ரெயில்களில் தொடர்ந்து சோதனை நடத்தப்படும். டிக்கெட் எடுக்காமல் பயணம் செய்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். எனவே பயணிகள் டிக்கெட் எடுத்து ரெயிலில் பயணிக்க வேண்டும் என்று ரெயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.