மதுரையில் பிரதமருடன் ஓன்று கூடும் கூட்டணி கட்சி தலைவர்கள்!

மதுரையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பொதுக் கூட்டத்தில் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கலந்துகொள்கின்றனர்.
பாஜக, அதிமுக இடையே கூட்டணி அமைந்தபிறகு, சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் கடந்த மாதத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். இந்நிலையில், மதுரைக்கு நாளை வரும் பிரதமர் மோடி, அரசு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னர், திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசாமி கோயிலுக்கு சென்று வழிபாடு நடத்த உள்ளார். திருப்பரங்குன்றம் கோயில் சர்ச்சைக்குப் பிறகு, அங்கு அவர் வழிபாடு நடத்துவது முக்கியத்துவம் பெற்றுள்ளது.இந்நிலையில், மண்டேலா நகரில் மாலை 4.30 மணியளவில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக் கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார். இந்த பொதுக் கூட்டத்தில் மத்திய அமைச்சரும், தமிழ்நாடு பாஜக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கலந்துகொள்கின்றனர்.கூட்டணிக் கட்சிகள் சார்பில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், தென்இந்திய பார்வர்டு பிளாக் தலைவர் திருமாறன் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு மதுரையிலிருந்து விமானம் மூலம் டெல்லிக்கு பிரதமர் நரேந்திர மோடி புறப்பட உள்ளார்.