800 கோடிப்பே… பொங்கல் பண்டிகை: மது விற்பனை படு ஜோர்..!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரூ.800 கோடிக்கும் மேல் டாஸ்மாக் கடையில் மதுவிற்பனை நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சென்னை: தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுவிற்பனை அமோக நடந்துள்ளது. இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை அரசு விடுமுறை நாட்களான சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் வந்ததால் வழக்கமான வார இறுதியில் நடைபெறும் விற்பனையையும் சேர்ந்து கூடுதலாக விற்பனையாகியுள்ளது.

பொங்கல் பண்டிகை மது விற்பனை கடந்த வாரம் 13ஆம் தேதி தொடங்கியது. இறுதி நாளான அன்றும் அதை தொடர்ந்து வந்த சனி, ஞாயிறு ஆகிய நாட்களிலும் எதிர்பார்த்த அளவை விட மதுபானங்கள் அதிகளவில் விற்பனையாகி உள்ளன. பொங்கலுக்கு மறுநாள் திருவள்ளுவர் தினம் அனுசரிக்கப்பட்டதால் மதுக்கடைகள் முழுவதும் மூடப்பட்டன.

இதனால் ஞாயிற்றுக்கிழமை அன்று வழக்கத்தை விட மூன்று மடங்கு விற்பனை அதிகரித்து உள்ளது. டாஸ்மாக் மதுக்கடைகளில் வழக்கமாக தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகும். ஆனால், ஞாயிற்றுக்கிழமை ரூ.400 கோடியை தாண்டியது. சனிக்கிழமை ரூ.250 கோடி அளவிலும், அதற்கு முன்பாக வெள்ளிக்கிழமை ரூ.150 கோடி அளவிலும் மதுபானங்கள் விற்பனை நடந்துள்ளது.

மாட்டுப் பொங்கல் அன்று மதுக்கடைகள் மூடப்பட்டதால் பெரும்பாலானவர்கள் அதற்கு முதல் நாளே வாங்கி இருப்பு வைத்துக் கொண்டனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் காணும் பொங்கல் கொண்டாடப்பட்டது. அன்றும் இரண்டு மடங்கு மது விற்பனையாகியுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ரூ.350 கோடிக்கு குறையாமல் மது விற்பனையாகியுள்ளது எனப் பேசப்படுகிறது. நகரப் பகுதியில் உள்ளவர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று விட்டதால் கிராம புறங்களில் மது விற்பனை அதிகமாக இருக்கும். இதுகுறித்து அதிகார பூர்வமாக டாஸ்மாக் நிர்வாகம் விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.