75வது சுதந்திர தினம் : கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..!!

நாட்டின் 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கோவை ரயில் நிலையத்தில் ரயில்வே போலீசாரும், வெடிகுண்டு நிபுணர்களும் சோதனை நடத்தினர்.

நாட்டின் 75வது சுதந்திர தின விழா வரும் 15ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்தாண்டு அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடியேற்றி சுதந்திர தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு நாடு முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் சுதந்திர தினத்தன்று வ.உ.சி பூங்கா மைதானத்தில் ஆட்சியர் கொடியேற்ற அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார். இதனால் மாநகரில் 1,500 போலீசாரும், புறநகர் பகுதிகளில் ஆயிரத்திற்கு மேற்பட்ட போலீசாரும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கோவையில் ரயில் நிலையம், பேருந்து நிலையங்கள் மற்றும் விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் மற்றும் ரயில்வே போலீசார் இணைந்து தொடர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ரயில் நிலையத்திற்கு வந்து செல்லும் பயணிகளின் உடைமைகள் முழுமையாக பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்படுகிறது. ரயில்வே பிளேட்பாரங்கள், கோவை வந்து செல்லும் ரயில்களில் உள்ள கோச்கள் மெடல் டிடெக்டர்கள் கொண்டு சோதனை செய்யப்படுகின்றன. ரயில் நிலையத்திற்கு வரும் பார்சல்களும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், சிசிடிவி காமிராக்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.