சளி, காய்ச்சலுக்கான 67 மருந்துகள் தரமற்றவை – மத்திய தர கட்டுப்பாட்டு வாரியம் தகவல்.!!

சென்னை: சளி, காய்ச்சல் உள்ளிட்ட உடல்நல பிரச்சினைகளுக்கான 67 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆய்வில் தெரியவந்துள்ளது.

நாடு முழுவதும் விற்பனை செய்யப்படும் அனைத்து வகையான மருந்து, மாத்திரைகளை மத்திய, மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியங்கள் ஆய்வு செய்து வருகின்றன. ஆய்வின்போது போலியான, தரமற்ற மருந்துகள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

அதன்படி, கடந்த மார்ச் மாதத்தில் 931 மருந்துகளின் மாதிரிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில், சளி, காய்ச்சல், வலி, செரிமான பாதிப்பு, கிருமி தொற்று, வைட்டமின் குறைபாடு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு பயன்படுத்தப்படும் 67 மருந்துகள் தரமற்றவை என்பது கண்டறியப்பட்டது. அதில் பெரும்பாலானவை மேற்கு வங்கம், இமாச்சல பிரதேசம், உத்தராகண்ட் மாநிலங்களில் தயாரிக்கப்பட்டுள்ளன.

அந்த மருந்துகளின் விவரங்களை மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் தனது இணையதளத்தில்  வெளியிட்டுள்ளது.

தரமற்ற மருந்துகள் தயாரித்த நிறுவனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் வாரியம் முடிவு செய்துள்ளது.