கோவை ரெயில் பெட்டியின் இருக்கைக்கு அடியில் வைத்து கடத்தி வந்த 63 கிலோ கஞ்சா பறிமுதல்- வடமாநில வாலிபர் கைது.!!

தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்தந்த மாவட்ட போலீசார் தீவிர சோதனையில் ஈடுபடுகின்றனர்.
இதேபோல் கோவை மாநகர், புறநகர், மற்றும் ரெயில்வே போலீசார் சோதனை நடத்தி கஞ்சா விற்பவர்கள் மற்றும் கடத்தி வருபவர்களை கைது செய்து வருகின்றனர்.
கடந்த சில நாட்களாக ரெல்வே போலீஸ் துணை சூப்பிரண்டு யாஷமின் மேற்பார்வையில் ரெயில்வே போலீசார் ரெயிலில் சோதனை நடத்தி கஞ்சா, குட்கா ஆகியவற்றை பறிமுதல் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ரெயில் கஞ்சா கடத்தி வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் சிவகாமிராணி, சப்& இன்ஸ்பெக்டர் ராமன் மற்றும் போலீசார் கண்ணன், கார்த்திக், மகேந்திரன், செந்தில் முருகன், மகாராஜன், மாரிமுத்து ஆகியோர் சாலிமரில் இருந்து திருவணந்தபுரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவை வந்த போது சோதணை நடத்தினர்.
அப்போது முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் இருக்கையின் அடியில் சந்தேகத்திற்கு இடமாக இருந்த மூட்டையை எடுத்து பார்த்தனர். இதில் 63 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அங்கிருந்த வாலிபரிடம் விசாரித்தபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தார்.
உடனே போலீசார் அவரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் மேற்க வங்கம் மாநிலத்தை சேர்ந்த சுலில்முன்டா (39) என்பதும் அவர் ரெயில் கஞ்சா கடத்தி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து சுலில்முன்டாவை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.