காதல் தகராறு… கோவை கல்லூரி மாணவரை காரில் கடத்தி கொல்ல முயற்சி- 6மாணவர்கள் கைது ..!

கோவை : தர்மபுரி மாவட்டம் அரூர் பக்கம் உள்ள எல்ல புதையன் பட்டியைச் சேர்ந்தவர் மதிவாணன். இவரது மகன் இசை பூங்குன்றன் (வயது 20) இவர் கோவை ஈச்சனாரி பொள்ளாச்சி ரோட்டில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பிஎஸ்சி கம்ப்யூட்டர் சயின்ஸ் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். ஈச்சனாரியில் அறை எடுத்து தங்கி உள்ளார். இவர் அதே கல்லூரியில்  பி எஸ் சி இரண்டாம் ஆண்டு படிக்கும் கோவை ராமநாதபுரத்தை சேர்ந்த ஒரு மாணவியுடன் நட்பு வைத்திருந்தார். இந்த மாணவி மீது அதே கல்லூரியில் பிஎஸ்சி இரண்டாம் ஆண்டு படிக்கும் அபிஷேக் என்பவரும் ஒரு தலை காதல் வைத்திருந்தார். இது பற்றி அந்த மாணவி இசை பூங்குன்றனிடம் கூறினார். இசை பூங்குன்றன் தனது நண்பருடன் சேர்ந்து அபிஷேக்கிடம் கேட்டார். இதனால் ஏற்பட்ட தகராறில் அபிஷேக் இசை பூங்குன்றம் தங்கியிருந்த அறைக்கு தனது நண்பர்களுடன் காரில் வந்து அவரை கடத்திச் சென்று தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.  இதில் இசை பூங்குன்றன் படுகாயம் அடைந்தார். இதுகுறித்து போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து அபிஷேக்கின் நண்பர்களான கோவைபுதூர் சக்தி நகரை சேர்ந்த கவுசிக் பிரவீன் (வயது 26) தர்மபுரி அரூரை சேர்ந்த நவீன் குமார் (வயது 19) ஈரோடு கருங்கல்பாளையத்தைச் சேர்ந்த ஆசிக் ரகுமான் ( வயது 19 ) கள்ளக்குறிச்சி ப பாண்டியராஜன் ( வயது 21 )தர்மபுரி அரூர் தொட்டம்பட்டியை சேர்ந்த தீபக் (வயது 19)சஞ்சய் (வயது 20) ஆகியோரை நேற்று கைது செய்தனர். இவர்கள் 5 பேரும் அந்த பகுதியில் உள்ள கல்லூரியில் பட்டபடிப்பு படித்து வருகிறார்கள்.அபிஷேக் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். இவர்கள் மீது கடத்தல், கொலை மிரட்டல்  தாக்குதல் உட்பட 7 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது..