தமிழ்நாட்டின் முதலமைச்சரான விஜய், முன்னாள் முதலமைச்சரான ஸ்டாலினை, அவரின் ஆழ்வார்ப்பேட்டை வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்து வாழ்த்துப் பெற்றார்.அப்போது வாசலில் நின்று விஜயை வரவேற்ற உதயநிதி ஸ்டாலின், கட்டியணைத்தார். தொடர்ந்து உள்ளே சென்ற விஜய், ஸ்டாலினிடம் வாழ்த்துப் பெற்றார். அப்போது இருவரும் பொன்னாடை போர்த்தி, புன்னகைகளையும் பூங்கொத்துகளையும் பரிமாறிக் கொண்டனர். தொடர்ந்து எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘காலத்தின் நிறம் கருப்பு, சிவப்பு’ என்னும் புத்தகத்தை முதலமைச்சர் விஜய்க்குப் பரிசாக அளித்தார். திமுக தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் ஆன நிலையில், வெளியிடப்பட்ட புத்தகம் அது என்பது குறிப்பிடத்தக்கது.அப்போது திமுக மூத்த தலைவர்கள் எ.வ.வேலு, சேகர் பாபு, கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். தவெக சார்பில் அமைச்சர் புஸ்ஸி ஆனந்த், முதலமைச்சர் விஜய் உடன் வந்தார். முன்னதாக சட்டப்பேரவையில் எதிரெதிர் வரிசைகளில் உள்ள இருக்கைகளில் அமர்ந்து இருந்தபோதும் முதலமைச்சர் விஜய்- எதிர்க் கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பேசிக் கொள்ளாமல் இருந்த நிலையில், இப்போது ஆரத்தழுவிக் கொண்டனர். தொடர்ந்து முதலமைச்சர் விஜய், மதிமுக பொதுச் செயலாளரும் மூத்த அரசியவாதியுமான வைகோவை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற உள்ளார். ஏற்கெனவே நேற்று திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழக அரசியல் வரலாற்றில் இத்தகைய நாகரிக அரசியல் முன்னெடுப்புகள், தொண்டர்கள் மத்தியில் முன்னுதாரணமாக இருக்கும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.







