ஆன்லைன் லோன் ஆப் மூலம் கடன் வாங்கியவரிடம் அதிக வட்டி கேட்டும், ஆபாசமாக புகைப்படங்கள் அனுப்பிய மோசடி கும்பலின் 50 வங்கி கணக்குகள் முடக்கம்..!

த்தரபிரதேசத்தில் ஆன்லைன் லோன் ஆப் மூலமாக கடன் பெற்ற வாடிக்கையாளர்களிடம் தொடர்ந்து அதிக வட்டி கேட்டும், ஆபாசமாக புகைப்படங்களை அனுப்பி மோசடி கும்பல் ஒன்று மிரட்டி வருவதாக புகார் ஒன்று எழுந்தது.

அந்த புகாரின் அடிப்படையில் மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

தீவிர விசாரணைக்குப் பிறகு, கலெக்சன் ஏஜெண்டான உத்தரபிரதேசத்தை சேர்ந்த தீபக்குமார் பாண்டே, ஹரியானாவை சேர்ந்த ஜிதேந்தர் தன்வர், டீம் லீடர் நிஷா, மேனேஜர் பிரகாஷ் சர்மா ஆகியோரை போலீஸார் கைது செய்தனர்.

பின்னர், நடத்தப்பட்ட விசாரணையில், இவர்கள் வீட்டில் இருந்தபடியே 50 நபர்களை கொண்டு மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் 50க்கும் மேற்பட்ட மோசடி லோன் ஆப்புகளை உருவாக்கி, இந்த கும்பல் ஒரு நாளைக்கு கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது.

லோன் கொடுத்த வாடிக்கையாளர்களிடம் அதிக வட்டி கேட்டு மிரட்டியும், மார்பிங் செய்த புகைப்படத்தை அனுப்பி மிரட்டியும் பணப்பறிப்பில் ஈடுபட்டு வந்துள்ளனர். மேலும் இந்த மோசடி கும்பல் தலைவன் விகாஷ் பீகாரில் பதுங்கி இருப்பதும் கண்டுப்பிடிக்கப்பட்டது.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் போலீசார் சிறையில் அடைத்தனர். இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட நான்கு பேரையும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்தினர்.

அப்போது, பல திடுக்கிடும் உண்மைகள் வெளியாகின. முதலில், கால் சென்டர் பணிக்கு ஆட்களை தேர்வு செய்வது போல இண்டர்வியூ நடத்தி லோன் ஆப் மோசடி கும்பல் ஊழியர்களை பணிக்கு சேர்த்துள்ளனர். குறிப்பாக லோன் பெற்ற வாடிக்கையாளர்களை ஆபாசமாக திட்டவும், புகைப்படங்களை மார்பிங் செய்யவும் தனியாக இண்டர்வியூ வைத்து ஆட்களை தேர்வு செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த மோசடி கும்பல் வாட்ஸ் அப் கால் மூலமாக மட்டுமே தொடர்பு கொண்டு மோசடியில் ஈடுபடுவதால், மோசடி கும்பல் பயன்படுத்தும் ஐபி முகவரியை அனுப்ப வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு கடிதம் அனுப்பி இருப்பதாகவும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கும்பல் மோசடி செய்ய பயன்படுத்திய 50 வங்கி கணக்குகளை தற்போது போலீஸார் முடக்கி இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக இந்த மோசடி கும்பல் எளிதாக பிளே ஸ்டோரில் பதிவிறக்கம் செய்வதுபோன்ற 50க்கும் மேற்பட்ட லோன் ஆப்புகளை உருவாக்கி மோசடி செய்து இருப்பது பொதுமக்களிடையே அசிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இது போன்ற மோசடி லோன் ஆப்புகளை கண்காணிக்க ஆர்.பி.ஐ அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி வலியுறுத்த திட்டமிட்டுள்ளதாக மத்திய சைபர் கிரைம் சிறப்பு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.