தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா..!

தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா..

தாய்மொழி வழியில் தயாரிக்கப்பட்ட பொறியியல் பாடத்திட்டங்களை 5 மாதங்களில் 5 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுத் தலைவர் டி.ஜி. சீத்தாராம்.
தஞ்சாவூர் சாஸ்த்ரா நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 37 ஆவது பட்டமளிப்பு விழாவில் தெரிவித்தார்.

தஞ்சை சாஸ்த்ரா நிகர்நிலை பல்கலைகழகத்தில் 37வது பட்டமளிப்பு விழா நடைப்பெற்றது. விழாவில் அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் தலைவர் சீத்தாராம் கலந்து கொண்டு மாணவ. மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். முன்னதாக விழாவில் பேசிய அவர்,
தேசியக் கல்விக் கொள்கை மூலம் பல்வேறு திட்டங்களை நிறைவேற்ற திட்டமிட்டுள்ளோம். ஆய்வு மற்றும் புத்தாக்கத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக தேசியக் கல்விக் கொள்கை உள்ளது. மிக நெருங்கிய தொடர்புடைய ஆய்வும், புத்தாக்கமும் நம் நாட்டின் பல்வேறு துறைகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதன் மூலம் நம் நாடும் வளர்ச்சி அடைந்து வருகிறது.
தகவல் தொடர்பு தொழில்நுட்பம், கைப்பேசி தொழில்நுட்பத்தில் சாட் ஜிபிடியால் பல்வேறு இடையூறுகள் ஏற்பட்டுள்ளன. மனித ஆற்றலுக்கு பதிலாக சாட் ஜிபிடி பயன்படுத்தப்படுவதால், ஏராளமான வேலைவாய்ப்புகள் மறைந்துவிடும். அதே சமயம், புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். எனவே, எண்ம தொழில்நுட்பத் திறன் காரணமாக இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
உலக முழுவதுக்கும் அதிக அளவில் பட்டதாரிகளை அனுப்பி வைக்கும் நாடாக இந்தியா உருவாகி வருகிறது. அதாவது, இருபது லட்சம் பட்டதாரிகள் உருவாக்கப்படுகின்றனர். இவர்களில் 40 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். சந்திரயான் 3 திட்டத்தில் பெண்கள் அதிக அளவில் பங்கேற்று பணியாற்றினர். உலகத்துக்கு தலைமை ஏற்கும் விதமாக இந்தியாவின் லட்சிய பயணம் உள்ளது.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு லட்சிய செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது. இதில், மாணவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளலாம். நாடு முழுவதும் பல்வேறு பொறியியல் கல்வி நிறுவனங்களில் 110 செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. நிகழாண்டு மேலும் 100 செயலிகளை உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். கடந்த 1980 ஆம் ஆண்டுகளில் கர்நாடகம், மகாராஷ்டிரம், கேரளம் போன்ற மாநிலங்களில் ஏராளமான பொறியியல் கல்லூரிகள் தொடங்கப்பட்டன. தொழில்நுட்பக் கல்வியின் தரத்தை மேம்படுத்த வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியதைத் தொடர்ந்து, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு 1987 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. திறன்மிக்கப் பொறியாளர்களையும், ஆசிரியர்களையும் உருவாக்குவதற்காகப் பொறியியல் கல்வியில் மாற்றங்களை ஏற்படுத்த கற்றல், கற்பித்தல் அகாதெமி உருவாக்கப்பட்டன.
அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கட்டுப்பாட்டில் 3 ஆயிரத்து 600-க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 13 லட்சத்துக்கும் மேற்பட்ட இருக்கைகள் உள்ளன. இதன் மூலம் ஆண்டுக்கு 10 லட்சத்துக்கும் அதிகமான பொறியாளர்கள் உருவாக்கப்படுகின்றனர். மேலும், 3 ஆயிரத்து 400 டிப்ளமா கல்லூரிகள் மூலம் 10 லட்சம் பட்டயதாரிகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய துறைகளில் உலக அளவில் மூன்றாமிடத்தில் உள்ளோம். உலகில் முதலிடத்தைப் பெறுவதற்கான வாய்ப்பும் பிரகாசமாக உள்ளது. ஐரோப்பா உள்பட ஒவ்வொரு நாடும் பொறியியல் கல்வியைத் தாய்மொழியில் வழங்குகிறது. நம் நாட்டில் மட்டுமே ஆங்கிலத்தில் பயிற்றுவிக்கப்படுகிறது. தாய்மொழியில் பொறியியல் கல்வியை வழங்குவதற்காக அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்காக தமிழ், கன்னடம், மலையாளம், மராட்டி உள்பட 13 மொழிகளில் பொறியியல், பட்டயக் கல்வி பாடத்திட்டங்களை உருவாக்கி, அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு இணையதளத்தில் இலவசமாகக் கிடைக்கும் வகையில் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம், கடந்த 5 மாதங்களில் 17 நாடுகளிலிருந்து 5 லட்சம் பேர் இப்பாடத்திட்டங்களைப் பதிவிறக்கம் செய்துள்ளனர். இந்தப் பாடத்திட்டங்கள் பல்வேறு வல்லுநர்களைக் கலந்தாலோசித்து உருவாக்கப்பட்டுள்ளது என்றார் சீத்தாராம்.