கிரேன் மூலம் ரூ.50 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை ஆட்டைய போட்ட 3 பேர் கைது..!

கோவை விளாங்குறிச்சி ரோடு சிவ இளங்கோ நகரை சேர்ந்தவர் தங்கப்பன். இவரது மகன் சிவா (வயது 41) ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார் .இவர் கோவை ஆத்துப்பாலம் பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தின் உரிமையாளர் யூசுப் என்பவரின் மகன் முஷ்ரப் துல்லாவிடம் இருந்து ரூ. 50 லட்சம் மதிப்புள்ள சொகுசு காரை விலைக்கு வாங்கியுள்ளார். இதற்கிடையில் முஷ்ரப் துல்லாவின் உறவினரான ஊட்டியை சேர்ந்த முகமது நசீர் (வயது 30) என்பவருக்கும் முஷ்ரப் துல்லாவிற்கும் கொடுக்கல்- வாங்கல் பிரச்சனை இருந்து வந்துள்ளது ..இந்த நிலையில் முஷ்ரப் துல்லாவின் கார் விற்கப்பட்டதை அறிந்த முகமது நசீர் அந்த காரை எடுத்து வந்து விட்டால் தனக்கு வர வேண்டிய பணம் வந்துவிடும் என்று நினைத்து சிவா வீட்டில் நிறுத்தி இருந்த காரை திருட திட்டமிட்டார். இதற்காக அவர் தனது நண்பர்களான ஊட்டியை சேர்ந்த கார்த்தி ( வயது 27) நவீன் குமார் ( வயது 27) ஆகியோருடன் சேர்ந்து சிவா வீட்டில் நிறுத்தி இருந்த அந்த சொகுசு காரை கிரேன் மூலம் ஊட்டிக்கு எடுத்துச் சென்றுள்ளனர். இதுகுறித்து சிவா கோவை கோவில்பாளையம் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் முகம்மது நசீர்,கார்த்தி, நவீன் குமார் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து 3பேரையும் கைது செய்தனர். சொகுசுகார் பறிமுதல் செய்யப்பட்டது..