பட்டதாரிகள் 2 பேரை வழிமறித்து கத்தியால் குத்தி பணம் பறித்த வழக்கில் கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது..!

கோவை : கடலூர் மாவட்டம் பண்ருட்டியை சேர்ந்தவர் சொக்கலிங்கம். இவரது மகன் பூபதி ( வயது 22) அதே ஊரைச் சேர்ந்தவர் வீரபத்திரன். இவரது மகன் வீரபாண்டி (வயது 24) இவர்கள் இருவரும் பி.இ.பட்டதாரிகள்.இவர்கள் கோவை சரவணம்பட்டியில் கடந்த 2 -ந்தேதி நடந்த வேலை வாய்ப்பு முகாமில் பங்கு கொள்ள பஸ்சில் கோவைக்கு வந்தனர். அன்று அதிகாலை 1:30 மணிக்கு பஸ்சை விட்டு இறங்கி ஆவாரம்பாளையம் பாரதியார் ரோட்டில் உள்ள தனது நண்பர் அறைக்கு செல்வதற்காக நடந்து சென்றனர். அங்குள்ள பெண்கள் பாலிடெக்னிக் அருகே சென்ற போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 4 ஆசாமிகள் இவர்களை வழிமறித்து பணம் கேட்டனர்.இருவரும் கொடுக்க மறுத்ததனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த கொள்ளை கும்பல் இவர்கள் இருவரையும் கத்தியால் குத்தி அவர்களிடம் இருந்த செல்போன்.பணம் ரூ 3ஆயிரம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு தப்பிச் சென்று விட்டனர்.’தலையில் பலத்த காயத்துடன் ரோட்டில் கிடந்த இருவரையும் அந்த வழியாக வந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அதற்குள் அந்த ஆசாமிகள் தலைமறைவாகிவிட்டனர்.இதுகுறித்து காட்டூர் போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வந்தனர்.கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் உதவி போலீஸ் கமிஷன்ர் வின்சென்ட் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. இவர்கள் முக்கிய சந்திப்புகளில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி .கேமரா மூலம் ஆய்வு செய்து 3 பேரை நேற்று கைது செய்தனர்.விசாரணையில் அவர்கள் சின்னியம்பாளையம்,ஏரி மேடு பகுதியைச் சேர்ந்த ஜெகத் ஹரி என்ற சக்தி ( வயது 19) அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன், சின்னியம்பாளையம் மயிலம்பட்டியை சேர்ந்த கார்த்திகேயன் (வயது 19 ) என்பது தெரிய வந்தது. இவர்களில் ஜெகத் ஹரி கோவையில் ஒரு கல்லூரியில் டிப்ளமோ இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார் .கார்த்திகேயன் கூலி வேலை செய்து வருகிறார் .17 வயது சிறுவன் கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஎஸ்சி முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.இவர்களிடமிருந்து பைக், கத்தி, ரூ.750 பணம் பறிமுதல் செய்யப்பட்டது.