கோவையில் 2-வது கட்டமாக புதுமைப் பெண் திட்டத்தில் 1008 மாணவிகள் பயன்..!

கோவை: அரசு பள்ளிகளில், 6-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வரை படித்த மாணவிகள், உயர்கல்வி தொடர, தமிழக அரசால் மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் புதுமை பெண் திட்டம் செயல் படுத்தப்படுகிறது.
கோவையில் இத்திட்டத்தை செயல்படுத்தவும், கண்காணிக்கவும் கலெக்டர் தலைமையில், கல்லூரி கல்வி இணை இயக்குனர், முதன்மை கல்வி அதிகாரி, சமூக நலத்துறை அதிகாரி, முன்னோடி வங்கி மேலாளர் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில், முதல் கட்டமாக, இறுதியாண்டு, இரண்டாமாண்டு படித்த மாணவிகளின் வங்கிக் கணக்கில் உதவித்தொகை செலுத்தப்பட்டுள்ளது. இந்த கல்வியாண்டில் புதிதாக சேர்ந்த முதலாமாண்டு மாணவிகளுக்கு வழங்க ஆய்வு பணிகள் நடந்து வந்தது. அனைத்து கல்லூரிகளிலும், இப்பணிகளை கண்காணிக்க, நோடல் அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த திட்டத்துக்கு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்தது. குடும்ப சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக ‘புதுமைப் பெண்’ திட்டம் உதவுவதாக மக்கள் மகிழ்ச்சி தெரிவித்து வந்தனர். இதைத் தொடர்ந்து புதுமைப்பெண் இரண்டாம் கட்ட தொடக்க விழா நிகழ்ச்சி இன்று காலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மாணவிகள் பயன்பெறும் வகையில் ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் இரண்டாம் கட்டத்தை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக கலையரங்கத்தில் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகையினை, கலெக்டர் கிராந்தி குமார் பாடி வழங்கினார். இந்த திட்டத்தில் கோவை மாவட்டத்தில் முதல் கட்டமாக 3000 மாணவிகள் பயனடைந்தனர். இன்று நடந்த விழாவில் இரண்டாவது கட்டமாக 17 கல்லூரிகளைச் சேர்ந்த 1008 மாணவிகள் பயன் அடைந்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி கல்லூரி கல்வி இயக்குனர் கல்லூரிகளின் கல்வி இயக்குனர் கலைச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.