தாவூத் இப்ராஹிம் பற்றித் துப்பு கொடுத்தால் ரூ.25 லட்சம் சன்மானம் – தேசிய புலனாய்வு ஏஜென்சி அறிவிப்பு..!

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் தேடப்படும் தாவூத் இப்ராஹிம் பாகிஸ்தானில் பதுங்கியிருக்கிறான்.

தன் கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆயுதம், போதைப்பொருள் கடத்தல், இந்தியாவுக்குள் கள்ள நோட்டுகளைக் கடத்திக் கொண்டு வருதல் போன்ற வேலைகளில் ஈடுபட்டு வருகிறான். ஆனால் தாவூத் தங்கள் நாட்டில் இல்லை என்று பாகிஸ்தான் கூறிவருகிறது. தாவூத் இப்ராஹிம் மற்றும் அவன் கூட்டாளிகளுக்கு எதிராக தேசிய புலனாய்வு ஏஜென்சி கடந்த சில மாதங்களுக்கு முன்பு வழக்கு பதிவுசெய்தது.

அதனடிப்படையில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் தாவூத் இப்ராஹிம் மற்றும் அவன் கூட்டாளிகளுக்கு எதிராக மும்பையில் ரெய்டு நடத்தியது. அதைத் தொடர்ந்து தாவூத் இப்ராஹிம் கூட்டாளி சோட்டாசகீல் மைத்துனர் சலீம் ப்ரூட் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், தேசிய புலனாய்வு ஏஜென்சி வெளியிட்டிருக்கும் செய்தியில் தாவூத் இப்ராஹிம் குறித்துத் தகவல் கொடுத்தால் ரூ.25 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருக்கிறது. இது தவிர தாவூத் இப்ராஹிமின் சகோதரர் அனீஸ் இப்ராஹிம், டைகர் மேமன், ஜாவேத் ஜிக்னா ஆகியோர் குறித்துத் தகவல் கொடுத்தால் ரூ.15 லட்சம் சன்மானம் கொடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் தாவூத் இப்ராஹிமின் நெருங்கிய கூட்டாளி சோட்டாசகீல் குறித்துத் தகவல் கொடுத்தால் ரூ.20 லட்சம் கொடுக்கப்படும் என்றும் அதில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இவர்கள் இந்தியாவுக்கு எதிராக தீவிரவாதச் செயல்களில் ஈடுபட்டதோடு, லஷ்கர் இ தொய்பா, அல்-கொய்தா, ஜெய்ஸ் இ முகமது போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் சேர்ந்து இந்தியாவுக்கு எதிராகச் செயல்பட்டதாக தேசிய புலனாய்வு ஏஜென்சி வெளியிட்ட செய்தியில் தெரிவித்திருக்கிறது. இது தவிர தாவூத் சகோதரியுடன் தொழில் தொடர்பு வைத்ததாகக் கூறி தேசியவாத காங்கிரஸ் தலைவர் நவாப் மாலிக்கை சி.பி.ஐ அதிகாரிகள் கைது செய்திருக்கின்றனர்.