வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் கத்தியை காட்டி மிரட்டி நகை, பணம் திருடிய வழக்கில் 2 டிரைவர் கைது..!

கோவை வடவள்ளியில் உள்ள மருதம் நகரை சேர்ந்தவர் பெரியசாமி ( வயது 45 ) இவர் பூ மார்க்கெட்டில் பூக்கடை நடத்தி வருகிறார்.இவரது மனைவி மகேஸ்வரி(வயது 40).சம்பவத்தன்று காலையில பெரியசாமி கடைக்கு சென்றுவிட்டார். வீட்டில் மகேஸ்வரி மட்டும் தனியாக இருந்தார். அப்போது வீட்டில் நுழைந்து 2 மர்ம ஆசாமிகள் மகேஸ்வரியை கத்தியை காட்டி மிரட்டி பீரோவில் இருந்த நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர் .இதுகுறித்து வடவள்ளி போலீசில் புகார் செய்யப்பட்டது .போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். கொள்ளையர்களை பிடிக்க போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் உத்தரவின்பேரில் 3தனிப் படைகள் அமைக்கப்பட்டன.வடவள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை தலைமையிலான தனிப்படை போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர். அந்த பகுதியில் பொறுத்தப்பட்ட கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர்.இந்த நிலையில் நேற்று காலை போலீசார் வீரகேரளம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது பைக்கில் வந்த 2 பேர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை பிடித்து விசாரித்த போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர் .இதனை தொடர்ந்து 2 பேரையும் போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். இதில் அவர்கள் மதுரையைச் சேர்ந்த முத்துச்சுருளி (வயது 35) வடவள்ளியை சேர்ந்த அரவிந்த் ( வயது 25) என்பதும், இவர்கள் தான் மகேஸ்வரியை மிரட்டி நகை – பணம் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. தொடர் விசாரணையில் பெரியசாமி வீட்டில் கார் வைத்துள்ளார். எங்காவது குடும்பத்துடன் வெளியில் சென்றால் கார் ஓட்டுவதற்கு இவர்கள் 2 பேரையும் டிரைவராக அழைத்துச் செல்வது வழக்கம் .இந்த நிலையில் அரவிந்துக்கு பணம் தேவைப்பட்டுள்ளது. அப்போது முத்து சுருளி பெரியசாமி வீட்டில் நகை-பணம் உள்ளது. அதனை நாம் கொள்ளையடித்து விடலாம் என திட்டம் போட்டு கொடுத்துள்ளார் . அதன்படி அவர்கள் இருவரும் கொள்ளையை நிறைவேற்றியது தெரியவந்தது .இதையடுத்து போலீசார் அவர்கள் 2 பேரையும் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 17பவுன் நகை, ரூ1 லட்சத்து 84, ஆயிரம் பணம் மற்றும் காரையும் பறிமுதல் செய்தனர்.இந்த வழக்கில் துரிதமாக துப்பு துலக்கி கொள்ளையர்களை கைது செய்தனர். பொருட்களை மீட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் அப்பாதுரை மற்றும் தனி படையினரை கோவை சரக டி,ஐ.ஜி. முத்துசாமி,போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் பாராட்டினார்கள் .