கோவை சுந்தராபுரம் பக்கம் உள்ள குறிச்சி அவுசிங்யூனிட் பேஸ் II பகுதியில் மழலையர் பள்ளிக்கூடம் கட்டுவதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் சுமார் 15 ஆண்டுகால பழமையான 2 சந்தன மரங்கள் வளர்ந்து வந்தன. இந்த நிலையில் நேற்று அதிகாலையில் அங்கு வந்த மர்ம ஆசாமிகள் 2 சந்தன மரங்களை அடியில் இருந்து 4 அடி நீளத்துக்கு வெட்டி கடத்திச் சென்று விட்டனர். இது குறித்து சுந்தராபுரம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினார்கள். அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். வேனில் வந்து இந்த சந்தன மரங்களை வெட்டி கடத்திச் சென்றிருப்பதாக தெரிய வந்தது.கேரளாவைச் சேர்ந்த சந்தன மர கடத்தல் கும்பலுக்கு இதில் தொடர்பு உள்ளதா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்பு போத்தனூர் சுந்தராபுரம் பகுதியில் சந்தன மரங்கள் வெட்டி கடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து சுந்தராபுரம் சப் இன்ஸ்பெக்டர் ராக்கியப்பன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்..
Leave a Reply