14 மொபைல் மெசெஞ்சர் செயலிகள் முடக்கம் – மத்திய அரசு அதிரடி நடவடிக்கை..!

ம்மு காஷ்மீரில் இருந்து செயல்படும் தீவிரவாத குழுக்கள் தங்களுக்குள் தகவல்கள் பரிமாறிக்கொள்ளவும், பாகிஸ்தானில் இருந்து உத்தரவு பெறவும் பயன்படுத்தப்பட்டதாக தெரியவந்துள்ள 14 மொபைல் மெசேஞ்சர் செயலிகளை மத்திய அரசு முடக்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், பல்வேறு தீவிரவாத குழுக்களைச் சேர்ந்தவர்கள் இந்தியாவிற்கு எதிரான தகவல்களைப் பரப்ப இந்த செயலிகளை பயன்படுத்துவதாக உள்துறை அமைச்சகத்திற்கு தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தகவல் தொழில் நுட்ப அமைச்சகம் மற்றும் தொடர்புடைய பிற அமைப்புகளுடன் இணைந்து உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

இந்த செயலிகள் அனைத்தும் பயன்படுத்துபவர்களின் அடையாளம் வெளியே தெரியாதபடிக்கு வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், எங்கிருந்து யாரெல்லாம் இதனை பயன்படுத்துகிறார்கள் என்பது கண்டறிய முடியாத படிக்கு உள்ளன என்றும் இது குறித்து அறிந்தவர்கள் கூறுகிறார்கள்.

இந்த செயலிகள் மூலமாக தீவிரவாதிகள் தங்களின் உறுப்பினர்களுடன் தொடர்புகொண்டு, ஜம்மு காஷ்மீர் யூனியன் மற்றும் பிற பகுதிகளில் தங்களின் தீவிரவாத நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்துள்ளனர். இதன் மூலம் ஜம்மு காஷ்மீர் பகுதி இளைஞர்களிடம் தீவிரவாத கொள்கைகள் திணிக்கப்படுவதாக தகவல் கிடைத்தைத் தொடர்ந்து, இந்திய தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000 கீழ் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.