வங்கியில் செலுத்த கொடுத்த ரூ.14½ லட்சத்துடன் பெட்ரோல் பங்க் ஊழியர் காருடன் மாயம்..!

கோவை சின்னினயம்பாளையம் சின்ன தோட்டம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் (வயது 47). இவரது உறவினர் முத்துசாமி. இவர் சின்னியம்பாளையம் அவினாசி ரோட்டில் பெட்ரோல் பங்க் வைத்து நடத்தி வருகிறார்.

சம்பவத்தன்று முத்துசாமி, சந்திரசேகருக்கு போன் செய்து வீட்டுக்கு வருமாறு கூறினார். சந்திரசேகர் உடனே அவரது வீட்டுக்கு சென்றார். அப்போது முத்துசாமி அவரிடம் தனது பெட்ரோல் பங்கில் வேலை செய்யும் விஜயகுமார் என்பவரிடம் ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை வங்கியில் செலுத்த கொடுத்தேன், எனது காரை எடுத்து சென்றார். வெகு நேரமாகியும் அவர் திரும்பவில்லை. செல்போன் எண்ணும் சுவிட்சு ஆப் செய்யப்பட்டுள்ளது. நீங்கள் சென்று விசாரித்து வாருங்கள் என்றார். அதன் பின்னர் சந்திரசேகர் அவர் கூறிய வங்கிக்கு சென்று விசாரித்தார். இதில் விஜயகுமார் வங்கிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

உடனே சந்திரசேகர் விஜயகுமார் தங்கி இருந்த வீட்டுக்கு சென்றார். அங்கு அவர் வீட்டை காலி செய்து சென்று விட்டதாக கூறியுள்ளனர். அப்போது தான் விஜயகுமார் காருடன் பணத்தை எடுத்து சென்றது தெரியவந்தது. இதையடுத்து சந்திரசேகர் சிங்காநல்லூர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் விஜயகுமார் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி தேடி வருகின்றனர். பெட்ரோல் பங்க் ஊழியர் காருடன் ரூ.14 லட்சத்து 50 ஆயிரத்தை எடுத்து மாயமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.